India

130 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி... 11 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டும் நேர்ந்த சோகம் !

குஜராத் மாநிலம் துவாரகாவில் அமைந்துள்ளது கல்யாண்பூர் என்ற கிராமம். இங்கு முலா சகாரா என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழில் செய்து வரும் இவருக்கு 3 வயதில் ஏஞ்சல் என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த சூழலில் இந்த குழந்தை அவர்கள் வீட்டில் தோண்டப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

இவர்களது வீட்டின் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணீர் இணைப்புக்காக ஆழ்துளை கிணறு ஒன்று தோண்டப்பட்டிருந்தது. ஆனால் அங்கே தண்ணீர் இல்லாத காரணத்தினால், அது அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தது. மேலும் அந்த ஆழ்துளை கிணற்றின் பணிகள் முடியாமல் இருந்ததால் அந்த கிணறு முழுமையாக மூடப்படாமல் இருந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று 3 வயது குழந்தை ஏஞ்சல், விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அரைகுறையாக மூடப்பட்டிருந்த அந்த ஆழ்துளை கிணற்றின் மூடி மேல் ஏறி நின்று விளையாடி கொண்டிருந்தார். ஆனால் இவரது பாரம் தாங்காமல் மூடி உடையவே சுமார் 130 அடி ஆழம் கொண்ட ஆழ்துளையினுள் அந்த குழந்தை விழுந்துள்ளது.

விழுந்த அந்த குழந்தை 30 அடியிலேயே சிக்கி கொண்ட நிலையில், குழந்தையின் அலறல் சத்தத்தை குடும்பத்தினர் கேட்டனர். ஓடி வந்து பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக தீயணைப்பு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் சிறுமியை சுமார் 11 மணி நேரம் முயற்சிக்கு பிறகு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சூழலில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த சிறுமி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "ரோஹித் ஷர்மாவை கட்டாயப்படுத்தி கேப்டன் பொறுப்பை ஏற்கவைத்தேன்" - கங்குலியின் கருத்தால் பரபரப்பு !