India

நிலவைத் தொடர்ந்து சூரியன் : ஜனவரி 6-ல் மற்றொரு சாதனைக்கு தயாராகும் இந்தியா.. இஸ்ரோவின் அறிவிப்பு என்ன ?

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை 386 கோடி ரூபாய் செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. இந்த சந்திரயான் 1 கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி அதிரவைத்தது.

அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 603 கோடி ரூபாய் செலவில் 'சந்திரயான் 2' விண்கலம் உருவாக்கப்பட்டது. 'சந்திரயான் 2' வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் லேண்டர் இயந்திரத்தை நிலவில் தரையிரக்க முயன்றபோது, நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்து நிலவின் தென் துருவ பகுதியில் விழுந்து நொறுங்கியது.

அதனைத் தொடர்ந்து அதன் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு 'சந்திரயான் 3' விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டது. அதிலிருந்து பிரிந்த விக்ரண் லேண்டர் வெற்றிகரமான நிலவில் தரையிறங்கி சாதனை படைத்தது. இந்த சாதனையைத் தொடர்ந்து அடுத்ததாக இஸ்ரோ அமைப்பு சூரியனை ஆய்வு செய்ய குறிவைத்து ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.

இந்த நிலையில், சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 கலன் வரும் ஜனவரி 6-ஆம் தேதி மாலை 4 மணிக்கு எல் 1 புள்ளியை அடைந்து ஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய இஸ்ரோ தலைவா் சோமநாத், சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 செயற்கைக்கோள் திட்டமிட்ட இலக்கை நோக்கிப் பயணித்து வருகிறது. இது வரும் ஜனவரி 6-ஆம் தேதி மாலை 4 மணிக்கு எல் 1 புள்ளியை அடையும்.

இதைத் தவிர நிகழாண்டில், 12 முதல் 14 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது. விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை முயற்சி கடந்த ஆண்டு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதற்காக இந்த ஆண்டு இரு சோதனைத் திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்று கூறியுள்ளார்.

Also Read: “‘இன்னார்தான் படிக்க வேண்டும்’ என்ற நிலையை மாற்றியது திராவிட அரசு...” - முதலமைச்சர் பெருமிதம் !