India

கோட்டா : தொடர் பலி வாங்கும் NEET... ஒரே ஆண்டில் ஒரே நகரில் 28 மாணவர்கள் எடுத்த விபரீத முடிவு !

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் தற்கொலை ஏராளமான செய்துகொண்டுள்ளனர்.

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது பல்வேறு இடங்களில் எதிரொலித்து வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது.

நீட் தேர்வு அமலுக்கு வந்ததில் இருந்து, தனியார் பயிற்சி மையங்களில் படித்தால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றிபெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தனியார் பயிற்சி மையங்கள் லட்ச கணக்கில் கட்டணத்தை உயர்த்தி வருகின்றன. மேலும், அங்கு பயிலும் மாணவர்களுக்கு அதிகப்படியான வேலைப்பளுவால் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரிலும் நூற்றுக்கணக்கான தனியார் தேர்வு பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. இதனால் இது தனியார் தேர்வு பயிற்சி மையங்களின் தலைநகர் என்றே அழைக்கப்படுகிறது. ஆனால் இங்கு கடந்த சில வருடங்களாக நீட் போன்ற தேர்வுகளுக்காக தனியார் பயிற்சி மையங்களில் படித்துவரும் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இன்று ஒரு மாணவர் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பிர்ஹூம் என்ற பகுதியை சேர்ந்தவர் ஹுசைன் (20). இவர் ராஜஸ்தானின் கோட்டா நகரில் வௌஃப் நகரில் தங்கி, தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்கு பயின்று வந்துள்ளார்.

கடந்த ஒரு வருடமாக நீட் தேர்வுக்காக பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இந்த சூழலில் இவர் கடந்த சில நாட்களாக இவர் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்த சூழலில் இவர் இன்று தனது அறையின் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அருகில் இருந்தவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கே மாணவர் ஹுசைன் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இதனை கண்டு பதறிப்போன அவர்கள், அக்கம்பக்கத்தினரை அழைத்து மாணவரை மீட்டு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள், மாணவர் ஹுஸைன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை மாணவர் ஹுசைனின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. தற்கொலை குறிப்பும் கிடைக்கவில்லை என்று போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் நீட் பயிற்சியால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக அவரது நண்பர்கள் தெரிவிப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாத காலமாக கோட்டா நகரில் நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். இதுவரை நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வந்த 28 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: “NEET தேர்வை போல், NExt தேர்வையும் வீறுகொண்டு எதிர்ப்போம்...”: முதலமைச்ச்ர் மு.க.ஸ்டாலின் சூளுரை !