India

கணவன் கண் முன்னே பலியான மனைவி, 9 மாத குழந்தை... அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது நேர்ந்த சோகம் !

சென்னையை சேர்ந்தவர் செளந்தர்யா (23). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணமானது. தற்போது இவருக்கு 9 மாதத்தில் குழந்தை இருக்கும் நிலையில், குடும்பத்துடன் இன்று காலை கர்நாடகா மாநிலம் பெங்களுரு சென்றுள்ளனர். சென்னையில் இருந்து பேருந்து மூலம் பெங்களூரு சென்ற அவர்கள், பேருந்தில் இருந்து இறங்கி நடந்து கொண்டிருந்தனர்.

அப்போது குழந்தையை செளந்தர்யா தனது கையில் வைத்திருந்தார். இந்த சூழலில் ஹோபார்ம் பகுதியில் இருந்து சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது கணவர் முன்னே செல்ல, மனைவி குழந்தையை வைத்துக்கொண்டு நடந்துகொண்டிருந்தார். அந்த சமயத்தில் சாலையில் அறுந்து கிடந்த உயர் மின் அழுத்த கம்பியை செளந்தர்யா அறியாமல் மிதித்து விட்டார்.

இதில் செளந்தர்யா மற்றும் அவரது கையில் வைத்திருந்த 9 மாதக் குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உடல் கருகி பலியானர். அதிகாலை சுமார் 5 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தை கண்டு கணவர் சாலையிலேயே கதறி அழுதுள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து காவல்துறை மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அஜாக்கிரதையாக இருந்த மின்வாரிய அதிகாரிகள் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது, கணவன் கண் முன்னே மனைவி, 9 மாத குழந்தை உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: காலையில் நடைபயிற்சி... சுருண்டு விழுந்த ‘தூம்’ பட இயக்குநருக்கு நேர்ந்த சோகம் - திரையுலகம் அதிர்ச்சி !