India

பட்டியலின இளைஞர் மீது தாக்குதல்.. சிறுநீர் கழித்து கொடூரம்.. தொடரும் வன்முறைக்கு குவியும் கண்டனங்கள் !

ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது கஞ்சிகச்சேர்லா என்ற கிராமம். இங்கு ஷ்யாம் குமார் என்ற பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஷ் ரெட்டி என்ற பழைய நண்பர் ஒருவர் இருந்துள்ளார். இந்த சூழலில் சம்பவத்தன்று ஹரிஷ் ரெட்டி, ஷ்யாம் குமாரிடம் நன்றாக பேசியுள்ளர். மேலும் அவரை சிவசாய் க்ஷேத்ரா என்ற இடத்திற்கு போகலாம் என்று அழைத்துள்ளார். ஹரிஷை நம்பிய ஷ்யாமும் அவர் கூறிய இடத்துக்கு சென்றுள்ளார்.

அங்கே ஹரிஷ் ரெட்டியின் 5 நண்பர்கள் ஷ்யாமை கிண்டலடித்து, வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக்கொண்டு குண்டூர் பகுதிக்கு கூட்டி சென்றுள்ளனர். அங்கே வைத்து ஹரிஷ் ரெட்டி உட்பட 6 பேர் கொண்ட கும்பல், ஷ்யாம் குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதோடு அவரை சரமாரியாக தாக்கி படுகாயங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

இவர்கள் அடி தாங்கமுடியாமல் ஷ்யாமும் கத்தி கூச்சலிட்டுள்ளார். சிறிது நேரத்திலே சோர்வடைந்த ஷ்யாம், அந்த கும்பலிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அதற்கு அவர்களோ, ஷ்யாம் மீது சிறுநீர் கழித்து அதனை குடிக்கும்படி வற்புறுத்தியுள்ளனர். இந்த கொடூர தாக்குதல் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்துக்கு அம்மாநிலம் முழுவதும் இருந்து கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஹரிஷ் ரெட்டி உட்பட 6 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குறிப்பாக அவர்கள் ஜாமீனில் வெளியே வராதபடியும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சுமார் 4 மணி நேரம் ஷ்யாம் குமாரை பிடித்து வைத்து தாக்கியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் இந்த தாக்குதலுக்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.