India

கேரளாவில் ஜெப கூட்டத்தில் அடுத்தடுத்து வெடித்த வெடிகுண்டு: சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி- 36 பேர் படுகாயம்!

கேரள மாநிலம் கொச்சியில் களமச்சேரியில் உள்ள சாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. காலை வேலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுமார் 2 ஆயிரம் பேர்வரை கலந்துகொண்டிருந்துள்ளனர்.

அப்போது இந்த மாநாட்டில் திடீரென அடுத்தடுத்து மூன்று முறை குண்டு வெடிப்பு நடந்துள்ளது. மொத்தம் 3 இடங்களில் இந்த குண்டுவெடிப்பு நடந்ததாக போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ள நிலையில், 36 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இது குறித்த தெரிவித்த போலிஸார், IED (improvised Explosive Device-கையால் உருவாக்கப்பட்ட சக்தி குறைவான வெடிகுண்டு) வகை குண்டு வெடித்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “இது மிகவும் மோசமான நிகழ்வு. காவல்துறையினர் இந்தச் சம்பவத்தை மிகவும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மாநில காவல்துறை டி.ஜி.பி உட்பட உயர் அதிகாரிகள் கொச்சிக்கு சென்றுள்ளனர். காயமடைந்தவர்களில் இரண்டு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது,” என்று தெரிவித்தார்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கேரள மாநிலம் முழுவதும் காவல்துறையினர் உஷார் நிலையில் இருக்க காவல்துறை டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது ” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த சிறப்பு நேர்காணல்!