India

மாவட்ட ஆட்சியர் இருக்கையில் சாமியாரை அமரவைத்த IAS அதிகாரி : சர்ச்சையானதும் பகிரங்க மன்னிப்பு கோரிய சோகம்!

2019 பேட்ஜ் ஐ.ஏ.எஸ் அதிகாரி லக் ஷே சின்ஹால். இவர் பணிக்கு சேர்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்துவந்த நிலையில், தற்போது டில்லியின் தென்மேற்கு மாவட்ட கலெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது பெரும் சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார்.

டெல்லி பகுதியில் பிரபல சாமியார் இருக்கும் ஒருவரை தனது அலுவலகத்துக்கு அழைத்துள்ளார். அங்கு அவருக்கு மாவட்ட கலெக்டர் மரியாதை செய்துள்ளார். அதோடு நிற்காத அவர் கலெக்டர் அமரும் இருக்கையில் அந்த சாமியாரை அமர்த்தியுள்ளார்.

மேலும், அவருக்கு சால்வை போர்த்தி குனிந்து வளைந்து ஆசிர்வாதமும் வாங்கியுள்ளார். இது குறித்த வீடியோ இணையதளத்தில் வெளியான நிலையில், அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து தன்னுடைய செயலுக்கு மாவட்ட கலெக்டர் லக் ஷே சின்ஹால் மன்னிப்பு கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து வெளியான செய்திகளில், அந்த சாமியார் பல ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மானசீக குருவாக இருந்ததாகவும், கல்லூரி படிக்கும் போதே அவரை ஐ.ஏ.எஸ் படிக்க தூண்டுகோளாக இருந்ததாகவும், அதன் பின்னரும் தனக்கு பல்வேறு ஆலோசனைகள் கூறி வந்ததாகவும் கூறியுள்ளார்.

எனினும் அரசு பணியில் இல்லாத நபரை கலெக்டர் அமரும் இருக்கையில் எப்படி அமர வைக்கலாம் என பல்வேறு தரப்பினரும் அவர் மீது புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், அரசு சார்பில் இவர் மீது இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.

Also Read: ”இனி விசா இல்லாமல் இலங்கை செல்லலாம்” : அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இலங்கை - முழு விவரம் என்ன ?