India

எருமை மாட்டிற்காக 16 வயது சிறுவனை அடித்துக் கொன்ற கும்பல்: ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்திற்குட்பட்ட சந்தாலி தோலாவி பகுதியைச் சேர்ந்த மூன்று நண்பர்கள் கால்பந்தாட்ட போட்டியைப் பார்த்து விட்டு சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இவர்கள் ஹன்ஸ்திஹா பகுதியில் சென்றபோது சாலையிலிருந்த எருமை மாடுமீது மோதியுள்ளனர். அப்போது அங்கிருந்த மக்கள் சிறுவர்களைத் திட்டியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்களுக்கும், சிறுவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் காயம் அடைந்த எருமையின் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்குவதாகவும் சிறுவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் அங்கிருந்த நான்கு பேர் சிறுவர்களைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டே இருந்துள்ளனர். இதில் 16 வயது சிறுவன் பலத்த காயம் அடைந்துள்ளான்.

பிறகு அவனை மீட்டு அருகே இருந்த சுகாதார மையத்திற்குக் கொண்டு சென்று பரிசோதனை செய்தபோது அவன் இறந்துவிட்டது தெரியவந்தது. இந்த கொடூர சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து சிறுவனை அடித்தே கொன்ற குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என கோரி அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு குற்றவாளிகளை இரண்டு நாளில் கைது செய்வதாக போலிஸார் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Also Read: 11 வயது சிறுவனை கொடூரமாக கடித்த தெரு நாய்.. 3 மணி நேரம் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை.. பிறகு நடந்தது என்ன ?