India

ஒருதலை காதலுக்காக நண்பனை கொலை செய்த இளைஞர் : சடலத்துடன் காவல்நிலையம் வந்ததால் அதிர்ச்சி !

குஜராத் மாநிலம் அஹமதாபாத் நகரை சேர்ந்தவர் வேதாந்த் ராஜா (வயது 22). இவரின் தந்தை நியூசிலாந்தில் தொழிலதிபராக இருக்கும் நிலையில், இவர் அஹமதாபாத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் படித்து வருகிறார். இவரின் நண்பர் ஸ்வப்னில் பிரஜாபதி ( வயது 18).

நண்பர்களான இருவரும் அந்த பகுதியை சேர்ந்த ஒரே பெண்ணை காதலித்து வந்துள்ளனர். இதனால் இருவருக்கும் அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று இது குறித்து பேசி பிரச்சனையை தீர்க்க இருவரும் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி இருவரும் ஒரு இடத்துக்கு வந்து அங்கு இது பற்றி பேசியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் கைகலப்பாகவும் மாறியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த வேதாந்த் ராஜா தான் வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்வப்னில் பிரஜாபதியை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே ஸ்வப்னில் உயிரிழந்துள்ளார். பின்னர் அவரின் சடலத்தை தனது காரில் வைத்து, அதனை காவல்நிலையத்துக்கு எடுத்து வந்துள்ளார். பின்னர் காவல்துறை அதிகாரிகளிடம் சென்று தனது நண்பனை குத்தி கொலை செய்து, அவரின் சடலத்தை காரில் வைத்துள்ளதை கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலிஸார் அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த வேதாந்த் ராஜா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நாங்கள்தான் உண்மையான கட்சி.. பாஜக கூட்டணியை ஆதரிக்க மாட்டோம் - ஜேடிஎஸ் கட்சிக்குள் வெடித்த மோதல் !