India

அதானி நிறுவனத்தின் மற்றொரு ஊழல் : மக்களிடம் இருந்து பணம் திருட்டு - காங்கிரஸ் குற்றச்சாட்டு!

அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் குற்றம்சாட்டியது. பங்குச்சந்தையிலும் முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலமே தம் நிறுவனப் பங்குகள் விலை அதானி குழுமம் அதிகரித்துள்ளது என்றும் தனது அறிக்கையில் குற்றம் சாட்டி இருந்தது.

இந்த குற்றச்சாட்டு இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் கூட எதிர்கட்சிகள் அதானி நிறுவனத்தின் முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். அதேபோல் ஒன்றிய அரசு அதானி மற்றும் அம்பானி ஆகிய நண்பர்களுக்காக மட்டுமே செயல்பட்டு வருவதாக ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில், அதானி நிறுவனத்தின் மற்றொரு முறைகேடு வெளியே வந்துள்ளது. அதானி நிலக்கரி நிறுவனங்கள் சந்தை விலையை விட பல மடங்கு அதிகமாக வெளிநாடுகளிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளனர். இதனால் 2 ஆண்டுகளில் ரூ.12 ஆயிரம் கோடி அளவிற்கு லாபம் ஈட்டி இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, நவீன இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "அதானி நிறுவனம் குறைந்த அளவு வணிகத்தில் கூட 52% லாபம் ஈட்டியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளில் ரூ.12 ஆயிரம் கோடி அளவிற்குப் பறித்து இருக்கலாம். இது கோடிக்கணக்கான இந்தியர்களின் பாக்கெட்டில் நடந்த உண்மையான திருட்டு. இது நவீன இந்தியாவின் மிகப்பெரிய ஊழல். பேராசை, இதயமற்ற தன்மையால் இந்திய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.

Also Read: நாடாளுமன்ற தேர்தல் : “மகளிர் உரிமை மாநாடு முக்கிய பங்காக இருக்கும்” - கனிமொழி எம்.பி பேட்டி !