India
நிலக்கரி இறக்குமதியில் ரூ.10 ஆயிரம் கோடி ஊழல்? : மோடி ஆட்சியில் அதானி மெகா வசூல் - Financial Times பகீர்!
இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் அதானி நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. நிலக்கரி இறக்குமதியில் அதானி நிறுவனம் செய்த மெகா ஊழலே, இந்தியாவில் மின் கட்டணம் உயர காரணம் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வெளிநாட்டு நிறுவனம் மூலம் அதானி குழும பங்குகளை வாங்கி விற்று 2 பேர் கொள்ளை லாபம் ஈட்டியதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற அமைப்பு, கடந்த பிப்ரவரி மாதம் பரபரப்பு அறிக்கையை வெளியிட்டது. இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம், பங்குச்சந்தைகளில் முறைகேட்டில் ஈடுபட்டு பங்குகள் விலையை உயர்த்தியதாக ஹிண்டன்பர்க் அமைப்பு குற்றம் சாட்டியது.
இந்த விவகாரம் டெல்லி அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. இதேபோல், அமைப்பு ரீதியான குற்றங்கள் மற்றும் ஊழலை கண்டறிந்து வெளியிடும் 'ஓ.சி.சி.ஆர்.பி.' என்ற அமைப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் அதானி குழுமத்தின் மற்றொரு முறைகேட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. ஹிண்டன்பர்க் அறிக்கையின் 2-ம் பாகமாக கருதப்படும் அந்த அறிக்கையில், வெளிநாட்டு நிறுவனம் மூலம் அதானி பங்குகளை மறைமுக முதலீட்டாளர்கள் வாங்கி விற்ற 2 நிகழ்வுகளை அம்பலப்படுத்தியது.
நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அதானி குழுமத்தின் சந்தை மூலதனம் 8 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு 260 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக 'ஓ.சி.சி.ஆர்.பி. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இங்கிலாந்தின் முன்னணி பத்திரிகையான "பைனான்சியல் டைம்ஸ்" அதானி குழுமம் குறித்த ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தோனேசியாவில் இருந்து குறைந்த விலைக்கு நிலக்கரி வாங்கும் அதானி நிறுவனம், அதனை தனது குஜராத்தின் முந்த்ரா துரைமுகத்திற்கு கொண்டு வந்ததும், 52 சதவிகித லாபத்திற்கு விற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஜனவரியில் இந்தோனேசியாவில் 74 ஆயிரத்து 820 டன் நிலக்கரியை, 16 கோடி ரூபாய்க்கு வாங்கிய அதானி நிறுவனம், இந்தியா கொண்டு வந்ததும், 2 மடங்கு உயர்த்தி, 35 கோடி ரூபாயாக விலை அதிகரித்து அரசுக்கு விற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தைவானில் ஹை லிங்கோஸ், துபாயில் டாரஸ், சிங்கப்பூரில் பான் ஆசியா டிரேட்லிங்க் எனும் போலி நிறுவனங்கள் மூலம் நிலக்கரியை இறக்குமதி செய்து கொள்ளை லாபம் பார்க்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. நிலக்கரி இறக்குமதியில் அதானி நிறுவனம் செய்த இத்தகைய மோசடிகளால் இந்தியாவில் மின் கட்டணம் உயர வழிவகுத்துள்ளதாகவும் இதன் பாதிப்பு நாட்டின் ஒவ்வொரு சாமானிய மக்களின் தலையிலும் விழுந்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதானி நிலக்கரி ஊழல் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், ஒன்றிய பாஜக அரசின் அழுத்தத்தால் இந்த விசாரணையை புலனாய்வு அமைப்புகள் மூடி மறைத்ததாக பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி நிறுவனங்களின் மோசடிகளை மூடிமறைக்க ஒன்றிய அரசு என்னதான் முயன்றாலும், மோடியின் பணக்கார நண்பரின் ஊழல்கள் ஒவ்வொரு நாளும் அம்பலப்பட்டு வருவதை தடுக்க முடியாது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை, 52 சதவிகிதம் விலை உயர்த்தி, அதானி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
இதன் மூலம் அதானி நிறுவனம் 2 ஆண்டுகளில் 12 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை லாபம் பார்த்துள்ளது. இந்த மெகா ஊழலில் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள் யார்? என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!
-
இளம் அரசு பணியாளர்கள் : 9801 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“தமிழ்நாட்டின் எதிர்காலம் இளம் அரசுப் பணியாளர்களிடம் தான் இருக்கிறது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.5000 பஞ்சாமிர்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு!