India

குழந்தை இல்லாததால் கொடுமை.. சகோதரர்களுடன் சேர்ந்து மனைவியை வன்கொடுமை செய்த கணவர்.. உ.பி-யில் அதிர்ச்சி !

உத்திரபிரதேசம் மாநிலம், லக்னோ பிலிபிட் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஆனால் , இத்தனை ஆண்டுகள் ஆகியும் இந்த தம்பதிக்கு குழந்தை பிறக்காமல் இருந்துள்ளது.

முதலில் இதற்கு அந்த பெண்தான் காரணம் என கணவரின் வீட்டார் அந்த பெண்ணை கொடுமை செய்து வந்தனர். பின்னர் நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் மனைவிக்கு எந்த குறையும் இல்லை என்றும், கணவருக்குதான் உடல் ரீதியான பிரச்சனை இருப்பதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, தனக்கு நிச்சயம் ஒரு குழந்தை வேண்டும் என்றும், இதற்காக தனது சகோதரர்களுடன் உறவு கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என மனைவியை கணவர் துன்புறுத்தி வந்துள்ளார். ஆனால், இதற்கு மனைவி சம்மதம் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

இதன் காரணமாக, 5 இலட்சம் ரொக்கம், கார் வரதட்சணையாக பெற்றோரிடம் பெற்று வருமாறு கூறி அந்த பெண்ணை கணவர் வீட்டார் கொடுமை செய்துள்ளனர். மேலும் ஒருகட்டத்தில், அந்த பெண்ணை தனி அறையில் அடைத்து கணவரின் சகோதரர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து தப்பிய அந்த பெண் காவல்நிலையம் சென்று தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகாரளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணின் கணவர், அவரது பெற்றோர் மற்றும் மூன்று சகோதரர்களை கைது செய்துள்ளனர்.

Also Read: பாஜக MLA வீட்டை தாக்க முயன்ற கும்பல்.. எங்களால் சமாளிக்க முடியவில்லை என கடிதம் எழுதிய பாஜக மாநில தலைமை !