India

மணிப்பூரில் தொடரும் போரட்டம்.. பற்றியெரிந்த பாஜக அலுவலகம்.. - கட்டுக்குள் கொண்டு வராத ஒன்றிய அரசு!

மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் மெய்தி சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 90 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்துள்ளது. இந்த வன்முறையில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்தவர்கள் தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்றுள்ளனர். அதன் பின்னர் அவர்களை கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி கண்டனங்கள் வழுத்தது. நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் விவாதிக்க எதிர்க்கட்சிகள் குரலெழுப்பி வந்தனர். எனினும் அங்கே நிலைமை கட்டுக்குள் வரவில்லை. இந்த சூழலில் அங்கே மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் இணையசேவை வழங்கப்பட்டது.

அப்போது சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் கடத்தி செல்லப்பட்ட 20 வயது மாணவனும், அவரின் தோழியான 17 வயது மாணவியும் காட்டில் இறந்த நிலையில் கிடக்கும் புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிஜாம் ஹெம்ஜித் என்ற மாணவரும்,அவரின் தோழியான ஹிஜாம் லிந்தோயிங்காம்பி என்பவரும் கடந்த ஜூலை 6-ம் தேதி காணாமல் போயுள்ளனர். அப்படி காணாமல் போனவர்களின் சடலங்கள் கிடக்கும் புகைப்படம் வெளியாகி மாணவர்கள் மத்தியில் போரட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அதனை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் பதற்றமான சூழல் அங்கே ஏற்பட்டு மீண்டும் அக்.1ம் தேதி வரை இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மணிப்பூர் மாநிலத்தில் 19 காவல் நிலைய் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகள் பதற்றமானவகையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த கலவரத்தை தொடர்ந்து அங்கே போராட்டக்காரர்கள் பாஜக அலுவலகத்தை தீ வைத்து எரித்துள்ளனர். மணிப்பூரில் 2 மாணவர்கள் கடத்தி கொல்லப்பட்ட விவகாரத்தை கண்டித்து போராட்டக்காரர்கள் நேற்று இரவு தௌபால் மாவட்டத்திலுள்ள பாஜக அலுவலகத்தை தீவைத்து எரித்தனர். இதனால் பல இடங்களில் பதற்றம் நீடித்து காணப்படுகிறது. மேலும் அம்மாநில தலைநகர் இம்பாலில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் இதே போல் மணிப்பூரில் ஒன்றிய அமைச்சர் ஆர்.கே ரஞ்சன் சிங் வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “வெறுப்பு பேச்சுக்கு பரிசா?” அவதூறாக பேசிய பாஜக எம்.பி-க்கு பொறுப்பு வழங்கிய பாஜக : குவியும் கண்டனங்கள்!