India
வரலாற்றிலேயே முதல் முறை.. உச்ச நீதிமன்றத்தில் சைகையில் வாதிட்ட பெண் வழக்கறிஞர் : அசந்துபோன தலைமை நீதிபதி!
பொதுவாக நீதிமன்றத்தில் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகள் வாதாட முடியாது. இதுவரை உச்சநீதிமன்றத்தில் அதற்கான அனுமதியும் வழங்கப்படாமல் இருந்தது. இந்த சூழலில் சச்சிதா என்ற வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் முன்பு ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
அதில் செவித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் சாரா சன்னி, காணொலி மூலம் சைகை மொழியில் வாதாட அனுமதிக்க வேண்டும் என்றும், சாரா சன்னி வாதிடுவதை, மொழிபெயர்ப்பாளர் சவுரவ் ராய் சவுத்ரி மொழிபெயர்ப்பார் என்றும் குறிப்பிட்டு கேட்டிருந்தார். அதன்படி தலைமை நீதிபதி சந்திரசூட் அனுமதியளிக்க, அவரது முன் காணொலி மூலம் சாரா சன்னி ஆஜராகி சைகை மூலம் வாதிட்டார். அவரது வாதங்களை சவுரவ் ராய் சவுத்ரி மொழிபெயர்த்தார்.
வழக்கறிஞர் சாரா சன்னி வாதிடும் நீதிமன்றமே அமைதி சூழலில் இருந்துள்ளது. மேலும் மாற்றுத்திறனாளி வாதாடுவதால் இந்த வழக்கு நீண்ட நேரம் எடுக்கும் என்ற எண்ணியிருந்த அங்கிருந்த சிலருக்கு அதுவும் பொய் என்று நிரூபிக்கும் விதமாக சாரா சன்னியின் வாதம் அமைந்திருந்தது. அவர் எடுத்து வாதிட்ட வழக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மனு தான்.
இந்த நிகழ்வு உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே முதல் முறை என்பதால் அனைவர் மத்தியிலும் பெரும் பூரிப்பை ஏற்படுத்தியது. மேலும் அருமையாக வாதிட்ட மாற்றுத்திறனாளி பெண் வழக்கறிஞர் சாரா சன்னிக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. நீதியை சமமாக அணுகுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த நிகழ்வு அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது.
உச்ச நீதிமன்றமே சைகை மொழியில் வாதிட அனுமதித்து இருப்பதால், இனி வரும் காலங்களில் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் இதுபோன்ற வழக்கறிஞர்கள் ஆஜராக வாய்ப்பு உள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் குழந்தை பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முதன்முறையாக சைகை மொழிபெயர்ப்பாளர்கள் பங்கெடுத்தனர். நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி விவரங்கள் பார்வையற்றோர் படிக்க உதவும் வகையில் முதன்முறையாக பிரெய்லி பதிப்பாக வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“கோவை மக்களுக்கு 2026 புத்தாண்டுக்கான பரிசு இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
கோவையில் 11,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய துணை முதலமைச்சர் : புதிய திட்டங்களுக்கு அடிக்கல்!
-
VBG RAMG சட்டத்தை எதிர்க்கும் பஞ்சாப் : சட்டமன்றத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு!
-
புத்தாண்டு கொண்டாட ஊருக்கு போறீங்களா?... : அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
கும்கி யானைகளை பராமரிப்பதற்காக ரூ.8 கோடியில் சாடியவல் யானைகள் முகாம் : திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்!