India

டெல்லியில் வீடு புகுந்து தம்பதியை தாக்கிய கும்பல்.. கணவருக்கு 15 முறை கத்திகுத்து.. நடந்தது என்ன ?

டெல்லியில் உள்ள ஆலிவிஹார் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் மண்டல், அவருக்கு ராகா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று அரவிந்த் தனது மகனை பள்ளியிலிருந்து அழைத்துக்கொண்டு வந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மனோஜ் ஹல்தார் என்பவருக்கும் அரவிந்த்துக்கும் முன்பகை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது இருவருக்கும் சிறிது கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்தவர்கள் இந்த சண்டையை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு பின்னர் அரவிந்த் தனது வீட்டுக்கு திரும்பிய நிலையில், இரவு 9.40 மணியளவில் அவரின் வீட்டுக்குள் ஒரு கும்பல் நுழைந்து அரவிந்தை கடுமையாக தாக்கி, தாங்கள் வைத்திருந்த கத்தியால் அவரை 15 முறை குத்தியுள்ளது. மேலும், தனது கணவரை காப்பாற்ற வந்த ராதாவின் தலையில் இரும்பு கம்பி ஒன்றால் அந்த கும்பல் தாக்கி அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இருவரின் அலறலை கேட்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்துக்குவந்த போலிஸார், ரத்த வெள்ளத்தில் இருந்த அரவிந்த் மற்றும் அவரின் மனைவி ராகாவை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ராஜூ பத்ரா (26), ரவி என்ற கொள்ளு (19), ஷம்பு (26) மற்றும் 17 வயது சிறுவன் ஒருவரை கைது செய்தனர். மேலும், விஜய் பத்ரா மற்றும் மனோஜ் ஹல்தாரை போலிஸார் தேடி வருகின்ற்னர். இந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கர்நாடகா : சீட் தருவதாக ரூ.6 கோடி வாங்கி மோசடி.. சிக்கிய பாஜக ஆதரவாளர்கள்.. தலைமறைவான மடாதிபதி !