India

ஓடி வந்த யானையை வீடியோ எடுத்த வனத்துறை ஊழியர்.. தவறி விழுந்ததில் நேர்ந்த விபரீதம்.. நடந்தது என்ன ?

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி பகுதியில் உள்ள பலஸ்கான் (Palasgaon) காட்டுப்பகுதி ஒன்றில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்தயானைகள் அங்கிருக்கும் விவசாய பயிர்களை சேதப்படுத்தி, மக்களை துன்பப்படுத்தி வருகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வனத்துறையில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அப்போது வனத்துறை அதிகாரிகள், அந்த காட்டு யானையை கண்டனர். அந்த யானை இவர்களை கண்டதும் அதிகாரிகளை துரத்த தொடங்கியது. இதனால் அங்கிருந்தவர்கள் காட்டுக்குள் பயந்து ஓடிவிட்டனர். இதனை கண்ட வனத்துறை அதிகாரிகளை அழைத்து வந்த ஓட்டுநர் சுதாகர் பி அத்ரம் என்பவர், உடனே வாகனத்தை எடுத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

அந்த சமயத்தில் திடீரென அந்த வாகனத்தை நிறுத்திவிட்டு, விரட்டி வந்த யானையை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். இதனை அந்த யானை கண்டதும், அந்த ஓட்டுநரை துரத்த தொடங்கியது. அந்த பயத்தில் அவர் ஓடவே, தடுமாறி கீழே விழுந்தார். அப்படி கீழே விழுந்த அவர் எழுந்திருக்க முயன்றபோது, அந்த யானை அவரை மிதித்து கொன்று விட்டது.

இதையடுத்து யானை அங்கிருந்து சென்ற பிறகு காட்டுக்குள் தப்பித்த அதிகாரிகள், விரைந்து வந்து ஓட்டுநர் சுதாகரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பலஸ்கான் காட்டுப்பகுதியில் ஒடிசா மாநிலத்தில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக யானைகள் மகாராஷ்டிராவின் கட்சிரோலி பகுதிக்குள் நுழைந்து கிராம மக்களின் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும் சூழலில், மக்கள் புகார் கொடுத்த நிலையில், நடவடிக்கை எடுக்க வந்தபோது யானை மிதித்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கையை பிளேடால் அறுத்துக் கொண்ட 14 மாணவிகள்.. விசாரணையில் கர்நாடகா போலிஸ் ஷாக்!