India

துப்பாக்கி முனையில் ராணுவ வீரர் கடத்திக் கொலை.. காவல் நிலையத்தை தாக்கிய கும்பல்.. மணிப்பூரில் அதிர்ச்சி !

மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெய்த்தி இனத்தவர்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியால் கடந்த மே 3ம் தேதி கடும் வன்முறை ஏற்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இந்த வன்முறை நடந்து வருகிறது.

இந்த வன்முறையில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி பழங்குடியினத்தவர்கள் மெய்தி இனத்தவர்களால் அடித்து விரட்டப்படுகின்றனர். அங்கு சில மாதங்களுக்கு 2 பழங்குடியின பெண்கள் நிர்வாண நிலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ நாட்டையே உலுக்கியது.

அதோடு சம்பவம் நடைபெற்று 4 மாதம் ஆகியும் அங்கு கலவரம் நிற்காமல் தொடர்ந்து வருகிறது. மெலும், கடந்த வாரம் காவலர் ஒருவர் கொல்லப்பட்டது அங்கு பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தியது. இதனிடையே ராணுவத்தினருக்கும் கலவரக்காரர்களுக்கும் அங்கு அடிக்கடி மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் பணியாற்றிவந்த ராணுவவீரர் கடத்திச் சென்று கொலைசெய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. ராணுவத்தின் 302 வது கம்பெனி பிரிவில் 41 வயதான கோம் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் தற்போது மணிப்பூரில் பணி அமர்த்தப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டில் இருந்து கடந்த சனிக்கிழமை இரவு ஒரு கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளது.

அதன் பின்னர் அவர் குறித்த எந்த தகவலும் வராத நிலையில், இம்பால் கிழக்கு மாவட்டத்திலுள்ள குன்னிங்தெக் என்ற இடத்தில் அவரது உடல் நேற்று சடலமாக கிடைத்துள்ளது. கடந்த வாரம் காவலர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் தற்போது ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பது மணிப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படுகொலையைத் தொடர்ந்து, நவீன ஆயுதங்களுடன் 5 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆனால், அந்த நபர்களை விடுவிக்க வலியுருத்தி இம்பால் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தை கும்பல் ஒன்று முற்றுகையிட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த மோதலில் அதிரடிப்படை வீரர்கள் உள்ளிட்டோர் காயமடைந்துள்ளனர்.

Also Read: ”1 கோடி மகளிர் கூட்டத்தை மொத்தமாக ஈர்த்துவிட்டார்களே என்ற வயிற்றெரிச்சலைக் கொட்டும் பழனிசாமி” : முரசொலி!