India

தொடரும் சோகம்.. டிரெட் மில்லில் ஓடிக்கொண்டிருந்தபோது திடீரென சுருண்டு விழுந்த இளைஞர்.. பதைபதைக்கும் Video

உத்தர பிரதேச மாநிலம் காசியாபத்தில் அமைந்துள்ள சரஸ்வதி விஹார் என்ற பகுதியை சேர்ந்தவர் சித்தார்த் குமார் சிங். 19 வயது இளைஞரான இவர், பள்ளி முடித்து, நொய்டாவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தாய் பீகாரில் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வரும் நிலையில், தந்தை நொய்டாவில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த சூழலில் சித்தார்த் குமார் சிங் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள தினமும் ஜிம்முக்கு சென்று வந்துள்ளார். அந்த வகையில் சம்பவத்தன்றும் காலை இவர் வழக்கம்போல் ஜிம்முக்கு சென்றுள்ளார். அப்போது ட்ரெட்மில்லில் (treadmill) ஓடிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் இவருக்கு திடீரென மூச்சு வாங்கியுள்ளது. பின்னர் நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்து மயங்கினார்.

இதனை கண்ட அருகில் இருந்தவர்கள், உடனடியாக இவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே இவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இதுகுறித்து போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால்தான் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தொடர்ந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக நடனமாடும்போது, ஓடும்போது என சிறுவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து வரும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டபோது இளைஞர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நீருக்குள் தவறி விழுந்த 2 சிறுவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி.. விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது சோகம் !