India

கோயில் வளாகத்தில் ஆயுதப் பயிற்சி நடத்தி வந்த RSS அமைப்பினர்.. தடை விதித்த கேரள உயர் நீதிமன்றம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள சிராயின்கீழ் சர்க்கரா தேவி கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்திற்குள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் இந்த ஆயுதப் பயிற்சியால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்குச் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் மற்றும் கோயில் நிர்வாக அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து கோயில் நிர்வாகமும் இங்கு ஆயுதப் பயிற்சியில் ஈடுபடக்கூடாது என ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரிடம் வலியுறுத்தியுள்ளது. ஆனாலும் தினமும் மாலை 5 மணி முதல் இரவு 12 மணிவரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சட்டவிரோதமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கோயில் வளாகத்தில் நடத்தும் ஆயுதப் பயிற்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என இரண்டு பக்தர்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன் மற்றும் பி.ஜி.அஜித்குமார் அடங்கிய அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கோயில் வளாகத்தில் யாரும் வெகுஜன ஒத்திகைகள் அல்லது ஆயுதப் பயிற்சிகளை நடத்தக்கூடாது எனக் கூறி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தி வந்த ஆயுதப் பயிற்சிக்குத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

Also Read: புதுச்சேரி மின்துறையில் ரூ.82 லட்சம் கையாடல்.. காசாளருக்கு 5 ஆண்டு சிறை.. சம்பவத்தின் பின்னணி என்ன ?