India

Loan App மூலம் ரூ.15 ஆயிரம் கடன்.. மிரட்டி ரூ.3 லட்சம் வரை பறித்த கும்பல்.. எச்சரிக்கும் சைபர் போலிஸ் !

புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் (40). இவர் புதுச்சேரி அரசு பல்நோக்கு ஊழியர் ஆவார். இவர் தனது அவசர தேவைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு instant loan app செல்போன் செயலி மூலம் ரூ.10 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இதற்காக அவர், அந்த செயலியில் அவரின் செல்போன்களில் உள்ள அனைத்து தகவல்களை பார்வையிடுவதற்கு அனுமதி அளித்திருக்கிறார். இதையடுத்து அவருக்கு உடனே கடன் வழங்கப்பட்டது. கடன் பெற்ற ஒரு வாரத்திலேயே அந்த தொகையை ஆண்ட்ரூஸ் திரும்ப செலுத்திவிட்டார்.

ஆனால் அந்த செயலி மூலம் அவரை ரூ.15 ஆயிரம் செலுத்த வேண்டும் என தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஆண்ட்ரூசின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், நாங்கள் கேட்ட பணத்தை கொடுக்காவிட்டால் உனது நிர்வரண படத்தை உறவினர்கள், நண்பர்கள் செல்போன் எண்ணுக்கு அனுப்பிவிடுவோம் என மிரட்டியுள்ளார்.

மேலும் ஆண்ட்ரூசின் நிர்வாண படத்தையும் அவரது செல்போனுக்கு அனுப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆண்ட்ரூஸ் பல்வேறு தவணைகளாக ரூ.3 லட்சம் வரை அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்குக்கு செலுத்தியுள்ளார். ஆனாலும் தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் பொறுமை இழந்த ஆண்ட்ரூஸ் இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். .

கடந்த சில மாதங்களாக இதேபோன்று நிர்வாண படங்களை அனுப்பி பணம் பறிக்கும் கும்பல் குறித்து புகார்கள் வந்ததால் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் இதனை பொருடப்படுத்தாமல் பலர் பணம் செலுத்தி ஏமாறுகின்றனர். இருப்பினும் இது போன்ற செயலிகளை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.