India

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சீனியர் மாணவர்.. பள்ளி பேருந்தில் நடந்த கொடூரம் !

டெல்லியின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது பெகும்பூர் (Begumpur). இங்கிருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் பல்வேறு மாணவர்கள் படித்து வருகின்றனர். அதன்படி அதே பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமி ஒருவரும் பள்ளியில் படித்து வருகிறார். இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து சிறுமி வீடு திரும்பியுள்ளார்.

அப்போது பள்ளி பேருந்தில் இருந்து இறங்கும்போது, சிறுமியின் பை சிறுநீரால் நனைந்திருந்தது. இதனை கண்ட தாயார் சிறுமியிடம் என்ன என்று விசாரித்துள்ளார். அப்போது சிறுமி எதுவும் பதில் கூறாமல் சோர்வாக இருந்ததால் பதறிப்போன பெற்றோர் தொடர்ந்து கேட்டுள்ளனர். அப்போது சிறுமி தன்னுடன் வந்த சீனியர் மாணவர் ஒருவர் பேருந்தில் வைத்து தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தனது மழலை மொழியில் கூறினார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மறுநாளே இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இருப்பினும் அதன்பேரில் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் ஆகஸ்ட் 25-ம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை பள்ளி நிர்வாகம் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்த முயன்றதோடு, புகாரை திரும்ப பெருமாறும் கூறியுள்ளனர்.

இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இந்த சம்பவம் குறித்து குற்றம்சாட்டப்பட்ட மாணவர் மீது மட்டுமின்றி, அதனை மறைக்க முயன்ற பள்ளி நிர்வாகம் மீதும் புகார் அளித்தனர். அப்போதும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த விவகாரம் டெல்லி மகளிர் ஆணையத்தின் கவனத்துக்கு சென்ற பிறகு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து இந்த நிகழ்வு குறித்து விளக்கம் அளிக்குமாறு ரோகினி நகர போலீஸ் துணை கமிஷனருக்கு நோட்டீஸ் டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்தே புகார் கொடுக்கப்பட்ட அனைவர் மீதும் போலீசார் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட மாணவரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஆடு திருடியதாக சந்தேகம்.. பட்டியலின இளைஞரை தலைகீழாக தொங்கவிட்டு சித்திரவதை : தெலங்கனாவில் கொடூரம்!