India
”மக்களின் கோபத்தை 200 ரூபாய் குறைத்துவிடாது”.. மோடி அரசை கடுமையாக தாக்கிய மல்லிகார்ஜூன கார்கே!
இந்தியாவில் 2014ம் ஆண்டு மோடி அரசு ஆட்சிக்கு வந்தபோது வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.417 ஆக இருந்தது. ஆனால் படிப்படியாக ரூ.1118 ஆக உயர்ந்துள்ளது. இந்த விண்ணை முட்டும் விலை உயர்வால் குடும்பத் தலைவிகள் கடும் அவஸ்தைகளை சந்தித்து வருகின்றனர்.
இந்த கடும் விலை உயர்வைக் குறைக்க வேண்டும் என காங்கிரஸ், தி.மு.க, சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன. அப்போது எல்லாம் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததே விலை உயர்வுக்கு காரணம் என மோடி அரசு கூறியது. பின்னர் கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறகும் கூட சிலிண்டர் விலையை மோடி அரசு குறைக்கவில்லை.
இந்நிலையில் 5 மாநிலங்களில் தேர்தல் நெருங்கும் நிலையில், வீட்டு உபயோ சமையல் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்துள்ளது. மேலும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களுக்கு ரூ.200 மானியம் வழங்கப்படும் எனவும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு தேர்தல் நாடகம் என எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில், கஷ்டத்தில் இருக்கும் நாட்டு மக்களின் கோபத்தை ரூ.200 மானியத்தால் குறைக்க முடியாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், "எப்போது வாக்குகள் குறைய ஆரம்பிக்கிறதோ, அப்போதே தேர்தல் பரிசுகள் விநியோகிக்க ஆரம்பம் ஆகும்!
மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை கொள்ளையடித்த இரக்கமற்ற மோடி அரசு, தற்போது தாய் மற்றும் சகோதரிகள் மீது போலியான நல்லெண்ணத்தை காட்ட வருகிறது. ஒன்பதரை வருடங்களாக சாமானியனின் வாழ்க்கையை சீரழித்துக்கொண்டே இருந்தார்கள், அப்போது ஏன் எந்த ஒரு "பாசப் பரிசு"ம் நினைவுக்கு வரவில்லை?
140 கோடி இந்தியர்களை ஒன்பதரை வருடங்களாக சித்திரவதை செய்துவிட்டு, "தேர்தல் லாலிபாப்களை" கைமாறுவது பலிக்காது என்பதை பாஜக அரசு தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் பத்தாண்டு கால பாவங்கள் கழுவப்பட முடியாதது.
பா.ஜ.கவால் அமல்படுத்தப்பட்ட பணவீக்கத்தை எதிர்கொள்ள, பல மாநிலங்களில் முதன்முறையாக காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கு ரூ.500 சிலிண்டர்களை வழங்கப் போகிறது. ராஜஸ்தான் போன்ற பல மாநிலங்கள் ஏற்கனவே இதை அமல்படுத்தியுள்ளன.
2024ல் கஷ்டத்தில் இருக்கும் நாட்டு மக்களின் கோபத்தை ரூ.200 மானியத்தால் குறைக்க முடியாது என்பதை மோடி அரசு அறிந்து கொள்ள வேண்டும். இந்தியாவைப் பற்றிய பயம் நல்லது, மோடி அவர்களே! பொதுமக்கள் முடிவு செய்து விட்டனர். பணவீக்கத்தை முறியடிக்க, பா.ஜ.க.வுக்கு வெளியேறும் கதவை காட்டுவதுதான் ஒரே வழி" என்று தெரிவித்துள்ளார்.
Also Read
-
இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!