India

துர்நாற்றம்.. 4 நாட்களாக பூட்டி இருந்த வீடு: கதவை உடைத்து உள்ளே சென்ற போலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்திற்குட்பட்ட பரடனபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் மகாதேவ சாமி. இவர் மைசூரு ஆர்.எம்.சி.யார்டு பகுதியில் கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி அனிதா. இந்த தம்பதிக்கு15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது சந்திரகலா, தனலட்சுமி என இரண்டு மகள்கள் இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக இவர்கள் யாரும் வீட்டிலிருந்து வெளியே வரவில்லை. இதனால் இவர்கள் வெளியூருக்குச் சென்று இருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் நினைத்துள்ளனர். பிறகு அவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் அடித்துள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது 4 பேரும் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் போலிஸார் அவர்களது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் இந்த தற்கொலை சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் தற்கொலை கடிதம் ஒன்றையும் போலிஸார் கைப்பற்றியுள்ளனர். ஆனால் விசாரணைக்குப் பின்பே கடிதத்தில் இருப்பதுகுறித்து தெரிவிக்கப்படும் என போலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தங்கைக்காக நடந்த கொலை.. காட்டிக்கொடுப்பான் என அஞ்சி நண்பனையும் கொன்ற கொடூரம்.. மும்பையில் அதிர்ச்சி !