India

வெற்றிகரமாக நிலவில் கால்பதித்தது விக்ரம் லேண்டர்.. உலகில் யாரும் படைக்காத சாதனையைப் படைத்த இந்தியா !

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை 386 கோடி ரூபாய் செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. குறைத்த செலவில் செய்யப்பட்ட இஸ்ரோவின் இந்த சாதனையை பல்வேறு உலகநாடுகளும் பாராட்டின. இந்த சந்திரயான் 1 கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி அதிரவைத்தது.

அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 603 கோடி ரூபாய் செலவில் 'சந்திரயான் 2' விண்கலம் உருவாக்கப்பட்டது. இதில் நிலவில் தரையிறங்கி செயல்படும் 'விக்ரம்' என்ற லேண்டர் இயந்திரமும் உடன் அனுப்பப்பட்டது. 'சந்திரயான் 2' வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் லேண்டர் இயந்திரத்தை நிலவில் தரையிரக்க முயன்றபோது, நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன் பின்னர் நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது.

அதனைத் தொடர்ந்து அதன் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தற்போது 'சந்திரயான் 3' விண்கலம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த 'சந்திரயான் 3' விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டது. இதனைத் தொடர்ந்து சந்திரயான் - 3 விண்கலத்தில் இருக்கும் விக்ரம் என்ற லேண்டர் வரும் 23ம் தேதி மாலை 5.30 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என கூறப்பட்டிருந்தது. பின்னர் 6.04 மணியளியில் விக்ரம் நிலவில் தரையிறங்கும் என கூறப்பட்டுள்ளது.

அதன்படி இன்று மாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் முயற்சிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து விக்ரம் லேண்டரின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி மாலை 6.03 மணிக்கு வெற்றிகரமான நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டது. இதனை இஸ்ரோ மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் ஆரவாரத்தோடு கொண்டாடினர்.

இதன் மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் கால் பதித்த நாடு என்ற பெருமையை இந்தியா படைத்துள்ளது. அதே நேரம் நிலவின் தென்பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாடு என்ற பெருமையையும் இந்தியா படைத்துள்ளது.

தற்போது விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கியதால் எழுந்த தூசுகள் முழுவதுமாக நீங்கியபின்னர் விக்ரம் லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வரும். அது எடுக்கும் முதல் புகைப்படத்தை இஸ்ரோ பின்னர் வெளியிடும். இந்தியாவின் இந்த சாதனைக்கு உலகத்தின் பல்வேறு ஆய்வாளர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Also Read: சந்திரயான் - 3 : விக்ரம் லேண்டரின் ஆயுள் 14 நாட்கள் மட்டுமா? நிலவில் அது செய்யும் ஆய்வுகள் என்ன?