India

பன்றிக்கு வைத்த குறி: தவறியதில் 4வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. கதறும் குடும்பம்.. ஆந்திராவில் அதிர்ச்சி

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அடுத்துள்ளது லோவகோதுரு (Lovakothuru) என்ற கிராமம் உள்ளது. இங்கு பாலிவேல ராஜு - நாகலட்சுமி தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு தன்யாஸ்ரீ என்ற 4 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர்களது பக்கத்து வீட்டில் அனந்தரபு சூரிய சந்திரா என்ற நபர் வசித்து வருகிறார்.

சூரிய சந்திரா என்ற இந்த நபர் பன்றிகள் வளர்த்து வருகிறார். இந்த சூழலில் இவரது பன்றி ஒன்று பன்றி குடிலில் இருந்து வெளியேறி திரும்பாமல் இருந்துள்ளது. அந்த பன்றியை சூர்யா பிடிக்க முயற்சித்தும் அது பிடிபடவில்லை. எனவே மற்றொரு பன்றி வளர்ப்பாளாரான வைரலா பத்ரி என்பவர் அந்த பன்றியை சுட்டு பிடிக்க சொல்லி அறிவுறுத்தியுள்ளார்.

அதன்பேரில் சூர்யாவும் ஒரு நாட்டு துப்பாக்கி பயன்படுத்துபவரை நியமித்துள்ளார். அந்த நபரும் பன்றியை குறிநோக்கி சுட்டு தள்ள காத்திருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த துப்பாக்கி நபர் துப்பாக்கியோடு பன்றியை சுட தயாராக இருந்தார். அந்த சமயத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் 4 வயது சிறுமி தன்யா வெளியே வந்து விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது இந்த நபர் துப்பாக்கியால் பன்றியை சுட்டபோது, குறி தவறி அந்த குண்டு சிறுமி தன்யா மீது பாய்ந்தது. இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பலியானார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கதறி அழுதனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குற்றத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கால்வாயில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்.. 3 பேர் பலி: சென்னைக்கு வரும் வழியில் நடந்த விபத்து!