India

உ.பியை உலுக்கிய சம்பவம் : ஒரே அரசு மருத்துவமனையில் 80 கர்ப்பிணி பெண்களுக்கு HIV.. விசாரிக்க குழு அமைப்பு!

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் அமைந்துள்ளது லாலா லஜ்பத் ராய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இங்கு நாள்தோறும் நோயாளிகள் சிகிச்சை எடுத்துக்கொள்வர். குறிப்பாக அந்த பகுதியை சுற்றியுள்ள கர்ப்பிணி பெண்கள் இந்த மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெறுவதோடு பிரசவித்தும் செல்கின்றனர். அவ்வாறு வரும் கர்ப்பிணி பெண்களில் சிலருக்கு HIV பாதிப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதிலும் கடந்த 16 மாதங்களில் மட்டுமே சுமார் 80 கர்ப்பிணி பெண்களுக்கு HIV என்று சொல்லப்படும் எய்ட்ஸ் நோய் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த 80 பெண்களில் 35 பெண்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து வெளியான தகவலின்படி, 2022-23 ஆண்டிலேயே இந்த மருத்துவமனையில் 33 கர்ப்பிணி பெண்களுக்கு HIV நோய் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் மேலும் புதிய 13 கர்ப்பிணி பெண்களுக்கு இந்த நோய் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மருத்துவமனைக்கு வந்தவர்களில் 35 பெண்களுக்கும் HIV நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. HIV பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் இதே அரசு மருத்துவமனையில் தேவையான மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. குழந்தை பெற்ற 35 பெண்களின் குழந்தைகளுக்கு, 18 மாதங்கள் கழித்து HIV சோதனை செய்யப்படவுள்ளது. குழந்தைகளுக்கு தாய் கருவில் இருக்கும்போது, தாய்ப்பால் கொடுக்கும்போதும் இந்த நோய் பரவும்.

பொதுவாக பாலியல் உறவு, இரத்தம், ஊசி உள்ளிட்டவற்றின் மூலமே HIV - AIDS நோய் தொற்று ஏற்படும். ஆனால் ஒரே மருத்துவமனையில் 80 கர்ப்பிணி பெண்களுக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் சந்தேகத்தை வலுத்துள்ளது. இதனால் எவ்வாறு இந்த மருத்துவமனையில் இந்த தொற்று பரவியது என்பதை குறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் ஒரே அரசு மருத்துவமனையில் கடந்த 16 மாதங்களில் 80 கர்ப்பிணி பெண்களுக்கு HIV பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “சார்.. என்னை காப்பாத்துங்க” பைப்பில் தொங்கியபடி அதிகாலையில் போலீஸுக்கு போன் செய்த சிறுமி.. நடந்தது என்ன?