India

இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 70% அதிகமானோர் வேலையிழக்கும் அபாயம்.. வெளிவந்த அதிர்ச்சி அறிக்கை !

உலகம் முழுவதும் ஐ.டி நிறுவனங்களில் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஒருகாலத்தில் ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு அதிகமான ஊதியம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கும் ஊதிய வெட்டு, ஆட்கள் குறைப்பு போன்றவை தொடர்கதையாக மாறிவிட்டது.

அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக பல்வேறு நிறுவனங்கள் கடும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. இதன் தாக்கம் சிறிய நிறுவனங்கள் மட்டுமல்லாது முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களாகக் கருதப்படும் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களையும் பாதித்துள்ளது.

அதன் வெளிப்பாடுதான் ட்விட்டர், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட், போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் முடிவுக்கு தள்ளியுள்ளது. ஃபேஸ்புக் தங்களது ஊழியர்களை 11000 பேரை நீக்குவதாக அறிவித்தது. ட்விட்டர் தங்களது ஊழியர்களின் 50%க்கும் அதிகமானவர்களை பணிநீக்கம் செய்துள்ளது. மேலும் கூகுள் நிறுவனமும் தங்கள் 5% பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்தது.

இந்த நிலையில், எக்கனாமிக் டைம்ஸ் ஊடகத்தின் அறிக்கையில்படி பல்வேறு நிறுவனங்களின் முதலீட்டாளர்களும் தாங்கள் முதலீடு செய்யும் நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளும்படி அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கடந்த அரையாண்டில் மட்டும் 70 சதவீதத்திற்கும் அதிகமான பணியிடங்களை மூடிவிட்டதாக கூறியுள்ளது.

இ-காமர்ஸ், ஃபின்டெக், லாஜிஸ்டிக்ஸ், ஹெல்த்கேர் போன்ற அனைத்து துறைகளிலும் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும், பைஜூஸ், மீஷோ, ஷேர்சாட் போன்ற நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சிறுநீரை குடிக்க வைத்து கொடுமை.. சிறுவர்கள் ஆசனவாயில் மிளகாயை திணித்து கொடூரம்.. உ.பி-யில் அதிர்ச்சி !