India

ஆற்றின் அருகே ஆசையாக Selfie எடுத்த புதுமண தம்பதி.. விருந்துக்கு சென்ற இடத்தில் சோகம் !

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சித்திக் (28). இவருக்கும் நௌஃபியா நௌஷாத் (25) என்ற இளம்பெண்ணுக்கு கடந்த ஜூலை மாதம் 16-ம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதிகள் தங்கள் உறவினர்கள் வீட்டுக்கு விருந்து சென்றுள்ளனர். அந்த வகையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அன்சல் கான் என்பவரது வீட்டுக்கு விருந்துக்கு சென்றுள்ளனர்.

விருந்துக்கு சென்ற அவர்கள் அங்கே இருக்கும் சில இடங்களை சுற்றி பார்க்கவும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி நேற்றைய முன்தினம் மதிய உணவை சாப்பிட்டு முடித்த பிறகு சுற்றிப்பார்க்க வெளியே சென்றுள்ளனர். அப்போது பள்ளிக்கல் ஆற்றை சுற்றி பார்த்துள்ளனர். தற்போது பெய்து வரும் மழையால் ஆற்றில் நீர் வரத்து அதிகமாக எனவே அதனை புதுமண தம்பதிகள் மகிழ்ச்சியுடன் கண்டு களித்துள்ளனர்.

தொடர்ந்து அங்கிருக்கும் பாறையின் மீது ஏறி நின்று செல்பி எடுத்துள்ளனர். அவ்வாறு எடுக்கும்போது கால் வழுக்கி ஆற்றுக்குள் விழுந்துள்ளனர். அவர்கள் விழுந்ததை கண்ட அன்சல் கான், உடனே அவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அவரும் ஆற்று வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டார். இதையடுத்து சில நேரம் கழித்து அந்த பகுதிக்கு வந்தவர்கள் அங்கே இருந்த இரண்டு மோட்டார்வாகனத்தை கண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே மீட்பு குழுவோடு விரைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். நீண்ட தேடுதலுக்கு பிறகு இரவு நேரத்தில் உறவினர் அன்சில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து தம்பதிகளை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று அவர்களது உடல்களும் மீட்கப்பட்டது. 3 பேரின் சடலங்களும் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருந்துக்கு சென்ற புதுமண தம்பதிகள் சுற்றி பார்க்கும்போது ஆற்றின் அருகே நின்று Selfie எடுக்கையில் வழுக்கி ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஓடும் இரயிலில் துப்பாக்கி சூடு : ரயில்வே பாதுகாப்பு வீரர் (RPF) கொடூர செயலால் அதிகாலை 4 பேர் பரிதாப பலி !