India

பாலியல் வன்முறை நடந்து 18 நாட்கள் வழக்கு பதிவு செய்ய தாமதம் ஏன்?.. பா.ஜ.க அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெய்த்தி இனத்தவர்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியால் கடந்த மே 3ம் தேதி கடும் வன்முறை ஏற்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இந்த வன்முறை நடந்து வருகிறது.

மேலும் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி பழங்குடியினத்தவர்கள் மெய்தி இனத்தவர்கள் அடித்து விரட்டப்படுகின்றனர். அங்கு 2 பழங்குடியின பெண்கள் நிர்வாண நிலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ நாட்டையே உலுக்கி உள்ளது.

இந்த கொடூர சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஒன்றிய அரசு தொடர்ந்து அவையை ஒத்திவைத்து வருகிறது.

அதோடு பிரதமர் நரேந்திர மோடி இன்னும் ஏன் மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவில்லை என்ற கேள்வியும் தொடர்ந்து எழுந்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாமல் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

இதற்கிடையில் மணிப்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி சுந்திரசூட் தலைமையிலான அமர்வுக்கு வந்தது. பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஒன்றிய அரசு தரப்பில் தஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட், "மணிப்பூரில் மே 4 ஆம் தேதி பாலியல் வன்முறை நடந்துள்ளது?. ஆனால் வழக்குப் பதிவுசெய்ய 18 நாட்கள் தாமதம் ஏன்?. அந்த எப்.ஐ.ஆர்-களிலும் குற்றவாளிகள் பெயர் எதுவும் இல்லாதது ஏன்?. அருகாமை போலிஸ் ஸ்டேஷனுக்கு எந்த தகவலும் தெரியாதா?.

ஒரு மாதம் கழித்து ஜூன் 18 ஆம் தேதிதான் வழக்கு நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த தாமதம் ஏன்?. குற்றவாளி கும்பலிடம் போலிஸாரே பெண்களை விட்டுச் சென்றனர் என்பது அதிர்ச்சிகரமானது. நிர்பயா வழக்கு போன்ற தனிப்பட்ட வழக்கு அல்ல இது. மக்களுக்கு அரசு நிர்வாகம் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் மணிப்பூர் கலவரத்தை விசாரிக்க பெண் நீதிபதிகளை உள்ளடங்கிய குழு அமைக்க உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

Also Read: மணிப்பூரில் அசாதாரண சூழல், மக்கள் பாஜக மீது நம்பிக்கை இழந்து விட்டனர் -மணிப்பூர் சென்ற கனிமொழி MP !