India

8 மாத குழந்தையை விற்று iphone வாங்கிய தம்பதி.. ரீல்ஸ் மோகத்தால் நடந்த பகீர் சம்பவம்: எங்கு தெரியுமா?

மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெய்தேவ். இவரது மனைவி சதி. இந்த தம்பதிக்கு 8 மாதத்தில் ஓர் ஆண் குழந்தையும், 7 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த தம்பதி தங்களது சமூகவலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடுவதற்காக விலை உயர்ந்த iphone வாங்க முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர்களிடம் செல்போன் வாங்குவதற்குப் பணம் இல்லை. இதனால் அவர்கள் தங்களது 8 மாத ஆண் குழந்தையை விற்க முடிவெடுத்துள்ளனர். இதன்படி தங்களது குழந்தையை விற்று iphone வாங்கியுள்ளனர்.

இதையடுத்து, குழந்தை எங்கே? என அங்கம் பக்கத்து வீட்டார் தம்பதிகளிடம் கேட்டுள்ளனர். இதற்கு அவர்கள் முன்னுக்கு பின் முரணாகப் பதில் அளித்துள்ளனர். அதோடு விலை உயர்ந்து iphone எடுத்துக் கொண்டு மேற்குவங்க மாநிலம் முழுவதும் சுற்றி ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டு வந்துள்ளனர்.

இவர்களின் இந்த திடீர் மாற்றத்தால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் போலிஸார் வந்து விசாரணை செய்தபோதுதான் நடந்த உண்மையைக் குழந்தையின் தாய் சதி ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து தம்பதிகள் விற்ற நபரிடம் இருந்து குழந்தையை போலிஸார் மீட்டனர். பின்னர் குழந்தையை விற்ற தம்பதியைக் கைது செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை iphone வாங்கத்தான் விற்கப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: "சர்வதேச அளவில் நடக்கும் போட்டியில் இப்படியா நடப்பது ?" -இந்திய கேப்டனை விமர்சித்த ஷாகித் அப்ரிடி !