India

அதிர்ச்சி: செயற்கை நுண்ணறிவு (AI ) பயன்பாடு.. 90% பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கிய இந்திய நிறுவனம் !

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதலீடோடு OPEN AI என்ற மென்பொருள் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் Chat GPT-யின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அறிமுகம் செய்தது. அதில் இருந்து இணையஉலகம் செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படும் Artificial Inteligence-ஐ பற்றியே தொடர்ந்து பேசி வருகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சமீபத்திய ஆண்டுகளில் பல மடங்கு முன்னேறியுள்ளது, தற்போதைய நிலையில், செயற்கை நுண்ணறிவு செயலிகள் பல மடங்கு பெருகியுள்ளன. அதிலும் சமீபத்தில் அறிமுகமான Chat GPT மென்பொருள் செயற்கை ரோபோ போல செயல்படும் ஒரு அமைப்பாகும்.

இதனால் நமது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும், நம்முடன் உரையாட முடியும், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நமது தேவைகளுக்கு ஏற்ப அனைத்து பதில்களையும் Chat GPT-யால் தரமுடியும். அதிலும் கல்வி நிலைய பயன்பாடுகளில் கடிதம் முதல் கட்டுரை வரை அனைத்தையும் இதனால் செய்யமுடியும்.

அதேநேரம் கூகிள் போன்ற பல்வேறு நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு குறித்த ஆய்வில் இறங்கியுள்ளதால் விரையில் அதன் தரம் பெரிய அளவில் உருவாகும் என கூறப்படுகிறது. இது தவிர ஏராளமான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு புதிய விஷயங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மேலும், Chat GPT போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்பாட்டுக்கு வந்தால் அவை மனிதனின் வேலைகளை எளிதாக பார்க்கத் தொடங்கும் என்றும், இதனால் கோடிக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வேலைகளை இழப்பார்கள் என்றும் பல்வேறு நிபுணர்களும் அச்சம் தெரிவித்த நிலையில், தற்போது அந்த அச்சம் உண்மையாகியுள்ளது.

தற்போது இந்தியாவில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை காரணமாக வைத்து தனது ஊழியர்களில் 90 சதவிகிதத்தினரை வேலையில் இருந்து ஒரு நிறுவனம் நீக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை தளமாக கொண்டு செயல்பட்டு வந்த இ - காமர்ஸ் நிறுவனமான டுகான் தற்போது வாடிக்கையாளர் சேவை பிரிவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அந்த பிரிவில் இருந்த 90 சதவிகிதத்தினரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.

இது குறித்து டுகான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும்CEO சுமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் " செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர் சேவை பிரிவில், பதில் அளிக்கும் நேரம் வெகுவாக குறைந்துள்ளது. தீர்வு காணும் நேரமும் குறைந்துள்ளது. அதோடு வாடிக்கையாளர் பிரிவின் சேவை செலவுகள் 85 சதவிகிதம் குறைந்துள்ளது" என்று கூறியுள்ளார். அவரின் இந்த நிறுவனத்தின் செயலை தற்போது பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: சாலையோரம் கிடந்த சடலம்.. போலிஸ் விசாரணையில் சிக்கிய மனைவி, கடன் காரன்.. பெங்களுருவில் நடந்த பகீர் !