India
புதுச்சேரி: 15 வாகனங்களை இடித்து நிற்காமல் சென்ற கார்.. துரத்திப்பிடித்து கொடூரமாக தாக்கிய இளைஞர்கள்!
புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் உள்ளது நேரு வீதி. முக்கிய வர்த்தக வீதியான இந்த பகுதி ஒரு வழி பாதையாக உள்ளது. இந்நிலையில் இன்று மதியம் இந்த வீதியில் எதிர் திசையில் கருப்பு நிற கார் ஒன்று தாறுமாறாக சென்றுள்ளது. இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் அந்த வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளனர்.
ஆனால் அந்த கார் நிற்காமல் தொடர்ந்து வேகமாக சென்று கொண்டிருந்தது. மேலும் அப்பகுதி ஒரு வழி பாதை என்பதால் எதிரே வந்த வாகனங்கள் மற்றும் பொதுமக்களை இடித்து தள்ளியவாறு அந்த வாகனம் வேகமாக சென்றது. இதனை பார்த்த அங்கிருந்த இளைஞர்கள், மற்றும் பொதுமக்கள் தங்களது வாகனத்தில் அந்த காரை பின்தொடர்ந்து சென்றனர்.
இதில் கார் பஞ்சர் ஆன நிலையிலும் பொதுமக்கள் துரத்துவதை பார்த்த ஒட்டுனர் காரை நிறுத்தாமல் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் வரை கிழக்கு கடற்கரை சாலை அருகே சென்று, பின்னர் லாஸ்பேட்டை பகுதிக்குள் புகுந்து விமானம் நிலைய பின்புறம் சென்று நிலை தடுமாறி ஓடை அருகே சிக்கி நின்றது.
அப்போது காரை பின் தொடர்ந்து வந்த இளைஞர்கள் காரின் கண்ணாடி, மற்றும் கதவுகளை உடைத்து உள்ளிருந்தவர்களை வெளியில் இழுத்து போட்டு தர்ம அடி கொடுத்தனர். இதில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் காரில் வந்தவர்களை பொதுமக்களிடம் இருந்து மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இந்த விபத்து தொடர்பாக போலீசார் நேரு வீதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையை நடத்தியதில், வாகனத்தை ஓட்டியது சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த சுனில் என்பதும் அவர் தனது நண்பர்களான எபினாசர், தீலிப், ஆஷிக், ஸ்ரீநாத் ஆகியோருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து அளவுக்கு அதிகளமாக மது அருந்திவிட்டு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.
இந்த கார் மோதியதில் பொதுமக்கள் 5 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக கிழக்கு மற்றும் வடக்கு போக்குவரத்து காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
Also Read
-
சோறா.. இட்லியா.. கல்லா.. சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு நேரும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா வன்னியரசு?
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!