India

60 ரூபாய் பணத்திற்காக முதியவரை அடித்து கொன்ற 3 வாலிபர்கள்.. புதுச்சேரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

புதுச்சேரி முத்தியால் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் குடிப்பழக்கத்தால் குடும்பத்திலிருந்த வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால் கடந்த 4 ஆண்டுகளாக வெள்ளாளர் வீதியில் ஒரு கடையில் காவலாளியாக வேலை செய்து, நடைப்பாதையில் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 27 ஆம் தேதி நள்ளிரவு முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக போலிஸாரால் மீட்கப்பட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்துள்ளனர். இதில் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த முதியவரின் சட்டை பாக்கெட்டில் கைவிட்டு பணம் தேடியுள்ளனர். இதனால் தூக்கத்திலிருந்து எழுந்தார்.

அப்போது அந்த வாலிபர்கள் அவர்களிடம் பணத்தைக் கேட்டுள்ளனர். அவர் தரமறுத்துள்ளார். இதனால் மூன்று வாலிபர்களும் சேர்ந்து முதியவரைச் சரமாரியாக தாக்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் காட்சிப் பதிவாகியிருந்தது.

இதனைத் தொடர்ந்து போலிஸார் இந்த மூன்று வாலிபர்கள் குறித்து விசாரித்தபோது, குருசுக்குப்பத்தை சேர்ந்த மணிபாரதி, ஸ்டீபன், சசி என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், முதியவரின் பாக்கெட்டில் ரூ. 60 மட்டுமே இருந்தது. இந்த 60 ரூபாயை தரமறுத்தால் முதியவரை அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்தனர்.

Also Read: சொத்து முழுவதையும் நெய்மருக்கு எழுதி கொடுத்த ரசிகர்.. காரணத்தை கேட்டு நெகிழ்ந்த நெட்டிசன்கள்!