India

காதலித்ததால் ஆத்திரம்.. சிறுமியை கழுத்தை அறுத்து கொன்ற 19 வயது அண்ணன்.. பஞ்சாபில் அதிர்ச்சி !

பஞ்சாப் மாநிலம் முக்த்சார் பகுதியை அடுத்து அமைந்துள்ளது பகர்சார் என்ற கிராமம். இங்கு தம்பதி ஒன்று வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு 19 வயதில் ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்த சூழலில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த குடும்பத்தில் இருக்கும் தந்தை சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.

இதையடுத்து குடும்ப பொறுப்பு அந்த குடும்பத்தில் உள்ள மூத்த மகனான 19 வயதுடைய குல்விந்தர் சிங்கிற்கு வந்துள்ளது. இந்த இளைஞரும் குடும்பத்தை நல்லவிதமாக பார்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தாய் 2 சகோதரிகள், இந்த இளைஞர் என அனைவரும் அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த சூழலில் குல்விந்தர் சிங்கின் பெரிய தங்கையான 17 வயது சிறுமி, அந்த பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த சிறுமியின் காதல் விவகாரம் தெரியவரவே, அண்ணன் குல்விந்தர், அவரை கண்டித்துள்ளார். மேலும் அந்த இளைஞருடன் பேசக்கூடாது என்று மிரட்டியுள்ளார். இருப்பினும் அண்ணனின் பேச்சை கண்டுகொள்ளாத அந்த தங்கை, தனது காதலனுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனை மீண்டும் அறிந்த அண்ணன் அவரை தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று காலை நேரத்தில் தாய் வழக்கம்போல் பணிக்கு செல்லவே, வீட்டில் சகோதரிகள் மட்டும் இருந்துள்ளனர். அப்போது அங்கே வந்த குல்விந்தர் சிங், தனது மூத்த தங்கையிடம் காதல் விவகாரம் குறித்து கேட்டுள்ளார். அப்போது இருவருக்குள்ளும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குல்விந்தர், தனது சகோதரியை தாக்கியுள்ளார்.

மேலும் தனது வீட்டில் இருந்த கூர்மையான ஆயுத்தத்தை வைத்து அவரது கழுத்தை அறுத்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே அந்த சிறுமி இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து இதுகுறித்து போலீசாருக்கும், தாய்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் உயிரிழந்த சிறுமியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.

பின்னர் இதுகுறித்து விசாரிக்கையில், அவரது இளைய தங்கை நடந்தவற்றை கூறினார். அவரது வாக்குமூலத்தில் அடிப்படையில் அண்ணன் குல்விந்தர் சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர். 17 வயது சகோதரி காதலித்ததால் ஆத்திரமடைந்த 19 வயது அண்ணன் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 3 நாட்களில் 2-வது நிகழ்வு: ஒரே பகுதியில் நடந்த சம்பவம்.. சாலையை கடக்க முயன்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி