India

கட்டியணைத்து மனைவியின் முதுகில் துப்பாக்கியால் சுட்ட கணவர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட் ! - நடந்தது என்ன ?

உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில் அனேக் பால் - சுமன் பால் தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 3 மகள்கள், 1 மகன் இருக்கும் நிலையில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. ஆரம்பத்தில் பெரிதாக இல்லையென்றாலும் நாளுக்கு நாள் அது அதிகரித்தே காணப்பட்டுள்ளது. இந்த சூழலில் இருவருக்குமிடையே வாக்குவாதம் கடந்த 2-3 நாட்களாக முற்றி காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மனைவியை, கணவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். இதில் கணவரும் உயிரிழந்துள்ளார். சட்டென்று ஏதோ வெடித்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது இருவரும் இரத்த வெள்ளத்தில் கீழே கிடந்தனர். இதையடுத்து இருவரையும் மீட்ட அவர்கள், உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கே அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டனர்.

இருப்பினும் இந்த சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து சம்பவ இடத்திற்கு சென்று தொடர்ந்து விசாரித்து வந்தனர். அப்போது கணவர் அனேக், பில்லி - சூனியம் என மாந்திரகத்தை நம்பிய நபர் என்றும், இதனால் மனைவிக்கும் அவருக்கும் இடையே சண்டை நிலவி வந்ததும் என்றும் கூறப்படுகிறது. மேலும் சம்பவத்தன்றும் அவர் பூஜை மேற்கொண்டதும் தெரியவந்தது.

அவ்வாறு பூஜை முடிந்ததும் தனது மனைவி சுமனை அழைத்துள்ளார். பின்னர் அவரை ஆசையாக கட்டியணைத்தார். அப்படி கட்டையணைத்த அவர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் தனது மனைவியின் முதுகில் சுட்டுள்ளார். அப்படி சுட்டபோது, அந்த குண்டு மனைவியின் நெஞ்சை துளைத்து, கணவர் மீதும் பட்டுள்ளது. இதில் கணவர் - மனைவி ஆகிய இருவரும் குண்டடி பட்டு உயிரிழந்துள்ளனர்.

மனைவியை துப்பாக்கியால் சுட்டபோது, குண்டு கணவர் மீதும் பாய்ந்து உயிரிழந்துள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஆன்லைனில் வந்த லிங்க்.. நம்பி லட்சக்கணக்கில் முதலீடு செய்த பட்டதாரி இளம்பெண்.. இறுதியில் நேர்ந்த சோகம் !