India

ஒடிசா ரயில் விபத்து: அரசு வேலை பெற தாய் விபத்தில் தாய் இறந்ததாக பொய் கூறிய நபர்.. விசாரணையில் அதிர்ச்சி !

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே 2-ம் தேதி இரவு நேரத்தில் ஹவுராவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதியது. இதனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது யஷ்வந்த்பூர்- ஹவுரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு கிடந்த ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாயின.

தொடர்ந்து அடுத்தடுத்து 3 ரயில்கள் ஒரே நேரத்தில் விபத்தைச் சந்தித்ததால் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து நாட்டையை உலுக்கியுள்ளது. தற்போது வரை 275 பேர் உயிரிழந்துள்ளதாக ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது; மேலும் 1500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த கோர விபத்து இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதுமிலிருந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ரயில்வேயும், பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடியும், ரூ.5 லட்சம் வழங்கப்படும் என ஒடிசா அரசும் அறிவித்துள்ளது.

இந்த சூழலில் இந்த நிவாரண தொகையை பெறுவதற்காக ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தின் மனியாபந்தா பகுதியை சேர்ந்த கீதாஞ்சலி தத்தா என்ற பெண் ஒருவர் தனது கணவர் இறந்து விட்டதாக கூறி, ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். தொடர்ந்து அந்த ஆவணங்களை சரிபார்த்த அதிகாரிகள் இது போலியான தகவல் என்று கண்டறிந்தனர்.

இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தன்பேரில், கீதாஞ்சலியை பிடித்து விசாரித்தனர். அப்போது பணத்திற்காக ஆசைப்பட்டு கடந்த 13 ஆண்டுகளாக பிரிந்து வாழும் கணவன் பிஜய் தத்தா இறந்துவிட்டதாக போலி சான்றிதழ், ஆவணங்கள் கொடுத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

இந்த நிலையில், தற்போது அரசு வேலையே பெற முன்பே இறந்த தனது தாய் ஒடிசா ரயில் விபத்தில் இருந்ததாக அரசு வேலை பெற முயன்ற நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் பாட்னாவில் வசிக்கும் 42 வயதான சஞ்சய் குமார் என்ற நபர் ஒடிசா ரயில் விபத்தில் தனது தாய் இறந்து விட்டதாக கூறி நாடகமாடியுள்ளார்.

மேலும், வேலை இல்லாத அவர் அரசு வேலை பெறவேண்டி இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த விபத்துக்கு பின்னர் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவைச் சந்தித்து வேலை தேடும் நோக்கத்துடன் அவர் டெல்லிக்குச் சென்றுள்ளார். அங்கு அமைச்சரின் அதிகாரிகள் எழுப்பிய கேள்விக்கு தகவலை மாற்றி மாற்றி கூறியதால் அவர் மேல் சந்தேகம் எழுந்து விசாரணை நடத்தியபோது இந்த உண்மைகள் அனைத்தும் தெரியவந்துள்ளது. மேலும், அவரின் தாயார் கடந்த 2018-ம் ஆண்டே இறந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரை எச்சரித்த அதிகாரிகள் அவரை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: திருமணம் முடிந்த அடுத்த நாளே கணவரின் அந்தரங்க உறுப்பை கத்தியால் குத்திய மனைவி- வெளிவந்த அதிர்ச்சி காரணம்!