India

3 ரயில்கள்.. ஒரே இடத்தில் எப்படி விபத்து நடந்தது? முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த 5 அதிர்ச்சி தகவல்கள்!

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் ஹவுராவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இதனால் ரயிலின் சில பெட்டிகள் அடுத்த தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது அந்த தண்டவாளத்தின் வழியாக வந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு கிடந்த ரயில் வெட்டிகள் மீது மோதியது. அதேபோல் அடுத்த தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயிலும் தடம்புரண்டு இருந்த ரயில் பெட்டிகள் மீது மோதியது.

நேற்று இரவில் இருந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒடிசா, மேற்குவங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளும் ஒன்றிய அரசுகளும் ஒத்துழைப்புடன் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த கோர விபத்தில் 261 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் 1000க்கு மேல் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த ரயில் விபத்து சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இன்று ஒடிசா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேலும் மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி விபத்து நடந்த இடத்தில் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டு வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துரிதமாகச் செயல்பட்டு வருகிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அதிகாரிகள் குழு ஒன்று ரயில் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து விவரங்களை சேகரித்து வருகின்றனர். ரயிலில் பயணம் செய்த தமிழ்நாட்டு மக்களை மீட்டு சென்னைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தவறான சிக்கல் கொடுத்த காரணத்தாலே விபத்து நடந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ரயில் விபத்து எப்படி ஏற்பட்டது என 4 பேர் கொண்ட குழு ஒன்று முதற்கட்டமாக விசாரணை நடத்தியுள்ளது.

அதில், "சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பச்சை சிக்னல் முதலில் கொடுத்து விட்டு, உடனே அதை ரத்து செய்துள்ளனர். இதனால் மெயின் லைனுக்கு செல்ல வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லூப் லைனில் சென்றுள்ளது.

இந்த லுப் லைனில் இருந்த ரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியுள்ளது. இதனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு மெயின் லைனில் விழுந்துள்ளது. அப்போது அந்த வழியாக வந்த யஷ்வந்த்பூர் - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியதுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.