India

UPSC தேர்வு முடிவில் குளறுபடி.. ஒரே பதிவு எண்ணில் 2 பெண்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதால் குழப்பம்!

2020ம் ஆண்டுக்கான UPSC தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் மே 23ம் தேதி வெளியானது. இதில் 933 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஒரே தேர்வு எண்ணில் இரண்டு பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸின் பகுதியைச் சேர்ந்தவர் ஆயிஷா பாத்திமா 7811744 பதிவு எண்ணில் தேர்வு எழுதி 184 தரவரிசையில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் அதே பதிவு எண்ணில் அலிராஜ்பூரைச் சேர்ந்த ஆயிஷா மக்ரானி என்பவரும் தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால் இதில் யார் உண்மையான வெற்றியாளர் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அலிராஜ்பூரைச் சேர்ந்த ஆயிஷா மக்ரானியின் தேர்வுக்கான நுழைவு அட்டையில் சில தவறுகள் இருப்பது தெரியவந்துள்ளது. முதலில் ஆயிஷா பாத்திமாவின் நுழைவு அட்டையில் UPSCயின் வாட்டர் மார்க் உள்ளது. ஆனால் ஆயிஷா மக்ரானியின் அட்டையில் வாட்டர் மார்க் இல்லை.

அதேபோல் ஆயிஷா பாத்திமாவின் நுழைவு அட்டையில் கியூ ஆர் கோடு உள்ளது. ஆயிஷா மக்ராணி ஹால்டிக்கெட்டில் அது இல்லை. இதனால் ஆயிஷா பாத்திமாதான் வெற்றி பெற்ற உண்மையான நபர் என்று UPSC தெரிவித்துள்ளது.

இருப்பினும் எப்படி ஒரே பதிவு எண்ணில் இரண்டு பேர் தேர்வு எழுதினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் போலியான நுழைவு அட்டையில் ஒருவர் தேர்வு எழுதியதும் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒன்றிய அரசு நடத்தும் மிக முக்கிய பதிவிகளுக்கான தேர்வில் இப்படி முறைகேடு நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கோவையில் காணாமல் போன சிறுவன்.. பதறிய பெற்றோர்.. காவல்துறையின் சாமர்த்தியத்தால் பத்திரமாக மீட்பு !