India

குடும்பத்தை காண ஆசையாக பரோலில் வந்த கணவர்.. மனைவியை கொடூரமாக கொன்றதன் பின்னணி என்ன ?

பஞ்சாப் மாநிலம் தன் தரன் என்ற பகுதியில் சிம்ரன் கவுர் சிம்மு (40) என்பவர் வசித்து வருகிறார். இவரும், இவரது சகோதரி ஹர்மித் கவுர் என்பவரும் ஒரே குடும்பத்தில் இருக்கும் சகோதரர்களை திருமணம் செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் திருமணம் நடந்த நிலையில், சிம்முவின் கணவரான பல்ஜிந்தர் சிங் பைண்டர் கொலை குற்றம் சாட்டப்பட்டது.

இதனால் பல்ஜிந்தர் சிங் மற்றும் அவரது சகோதரர் ஜஸ்பிரீத் சிங் ஆகிய இருவரும் கொலை குற்றவாளிகளாக கருதப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக சிரியாவில் அடைக்கப்ட்டனர். இருவரும் சிறையில் இருக்கும் நிலையில், பல்ஜிந்தர் சிங் பரோலில் தனது குடும்பத்தை காண வந்துள்ளார்.

ஆனால் பல்ஜிந்தர் சிங்கின் மனைவி சிம்மு, மாறுதலாக நடந்துள்ளார். இதனால் அவரது நடவடிக்கையில் கணவர் சந்தேகம் கொண்டுள்ளார். மேலும் தன்னை தவிர்த்து வேறு ஒருவரை காதலிப்பாரோ என்ற சந்தேகத்தில் அவரிடம் நேக்காக கேள்வி கேட்டுள்ளார். இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிப்போகவே, பல்ஜிந்தர் சிங் அருகில் இருந்த கூர்மையான பொருளை கொண்டு தனது மனைவியை தாக்கியுள்ளார். இதில் அவர் கத்தி கூச்சலிடவே, அந்த சமயத்தில் வந்த சிம்முவின் தாயார் இதனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் தலை, கழுத்து என உடல் முழுவதும் இரத்த காயங்களுடன் சிம்மு மயக்க நிலையில் இருந்துள்ளார்.

தொடர்ந்து இதுகுறித்து தாயார் போலீசுக்கு தகவல் கொடுக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் பல்ஜிந்தர் சிங்கை கைது செய்தனர். தொடர்ந்து மயக்க நிலையில் இருந்த சிம்முவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடலை உடற்கூறாய்வு செய்து பின்னர், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறையில் இருந்து பரோலில் வந்த கணவர் மனைவி மீது சந்தேகப்பட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் பஞ்சாபில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கடந்த ஆண்டு இந்தியாவையே உலுக்கிய சம்பவம்.. புகாரளித்த பெண் படுகொலை.. கணவர் தற்கொலை முயற்சி! நடந்தது என்ன?