India

விவாகரத்துக்கு 1 கோடி ஜீவனாம்சம் வேண்டும்.. கோரிக்கை விடுத்த 2-வது மனைவி..கணவர் எடுத்த முடிவால் சோகம் !

டெல்லி ரஜோரி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் குப்தா. 71 வயதாகும் இவருக்கு அமித் என்ற (45) மகன் இருக்கிறார். அமித்துக்கு cerebral palsy என்ற மூளை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே இவரால் எழுந்து நடக்க இயலாது. இந்த சூழலில் குப்தாவின் முதல் மனைவி இறந்துபோயுள்ளார். இதனால் தனக்கு பிறகு தனது மகனை பார்த்துக்கொள்ள இரண்டாவதாக திருமணம் செய்ய எண்ணியுள்ளார் குப்தா.

அதன்படி தனது 70 வயதில், அதாவது கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் பூஜா என்ற 35 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார் குப்தா. ஆனால் ஆரம்பத்திலேயே பூஜா, அமித்தை சரியாக கவனித்து கொள்ளாமல் இருந்துள்ளார். மாறாக அவர் உண்டு, அவரது வேலை உண்டு என்று இருந்து வந்துள்ளார். இதனால் குப்தாவுக்கும், பூஜாவுக்கும் இடையே வாக்குவாதம் தகராறு இருந்துள்ளது.

மேலும் அமித்தை வேண்டுமென்றே கவனிக்காமல் இருந்து வந்துள்ளார் பூஜா. எனவே பூஜாவை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார் குப்தா. ஆனால் விவாகரத்துக்கு மறுத்த பூஜா, குப்தாவிடம் தன்னை விவகாரத்து செய்தால் 1 கோடி ரூபாய் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனை கேட்டதும் அதிர்ச்சியடைந்த குப்தா அவரிடம் கொடுக்க முடியாது என்று தடாலடியாக கூறியுள்ளார்.

இதனை கேட்டதும் ஆத்திரத்தில், தன்னாலும் விவாகரத்து கொடுக்க முடியாது என்று பூஜா கூறவே அவரை கொலை செய்ய எண்ணியுள்ளார் குப்தா. அதன்படி தனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் விபின் சேத்தி என்பவரை குப்தா அனுகியுள்ளார். அவர் தனது 20 வயது நண்பர் ஹிமான்ஷு என்பவரையும் கூட்டு சேர்த்து பூஜாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன்படி நேற்று (புதன்கிழமை) பூஜா, குப்தாவின் வீட்டில் தனியாக இருக்கும்போது இவர்கள் இருவரும் உள்ளே சென்று அவரை கத்தியால் பல முறை குத்தி கொலை செய்தனர். இந்த சம்பவத்தின் போது, அமித் வீட்டில் இருந்துள்ளதால், அதனை ஒரு திருட்டு சம்பவம் போல் ஜோடித்து விட்டு, இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதையடுத்து இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்து பூஜாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். மேலும் வீட்டில் திருட்டு சம்பவத்திற்கான அடையாளங்கள் எதுவும் இல்லாததால் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் குப்தா மற்றும் அவரது மகன் அமித்தின் பேச்சு சந்தேகத்திற்குரிய வகையில் இருந்ததால், அவர்களிடம் போலீசார் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து இந்த கொலை செய்த இருவரையும், குப்தா மற்றும் அவரது மகன் அமித் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். விவாகரத்து செய்ய ரூ.1 கோடி ஜீவனாம்சம் கேட்ட 35 வயது 2-வது மனைவியை 71 வயது கணவர் கூலிப்படை ஏவி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.