India

சொந்த மகளுக்கு விஷம் கொடுத்து கொலை.. தந்தை செய்த கொடூர காரியத்தின் பகீர் பின்னணி என்ன?

மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் பகுதியை அடுத்துள்ளது சாகாட் என்ற கிராமம். இங்கு 30 வயது நபர் ஒருவர் மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வருகிறார். இந்த சூழலில் இவருக்கு தனது மனைவி மீது சந்தேகம் இருந்துள்ளது. அவர் என்ன செய்தாலும் அதில் இவருக்கு சந்தேகம் இருந்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

ஒவ்வொரு முறையும் சண்டை பெரிதாகவே, மனைவி, தனது பிள்ளைகளை கூட்டி தன் அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். அதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனைவி மீதான சந்தேகத்தில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி, தன் பிள்ளைகளை கூட்டி அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் கணவர் எவ்வளவோ முயற்சித்தும் இந்த முறை அவர் சமாதானம் ஆகவில்லை.

எனவே விரக்தியில், தான் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். ஆனால் குழந்தைகளை தனது மனைவி பார்த்துக்கொள்வாரா என்ற பயத்தில் அவர்களையும் கொல்ல எண்ணியுள்ளார். அதன்படி சம்பவத்தன்று தனது 2 குழந்தைகளுக்கு விஷம் கலந்த உணவை ஊட்டி விட்டு, தானும் அந்த உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது அதில் ஒரு குழந்தை வாந்தி எடுக்கவே, மற்ற குழந்தைக்கு விடாமல் ஊட்டி விட்டுள்ளார்.

சாப்பாடை சாப்பிட்ட சில மணி துளிகளே அனைவரும் மயக்கமடைந்து விழுந்துள்ளனர். இதனை கண்ட உறவினர்கள் பதறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே சோதனை செய்த போது, அனைவரும் விஷம் அருந்தியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து தொடர்ந்து 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தீவிர சிகிச்சை பலனின்றி 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் தந்தையே மகளுக்கு விஷம் கொடுத்துள்ளதை கண்டறிந்தனர்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி மீதான சந்தேகத்தில் சொந்த மகளுக்கு தந்தையே விஷம் கொடுத்து கொலை செய்துள்ள சம்பவம் மகாராஷ்டிரா பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சொகுசு TV, 20 சொகுசு CAR, பங்களா.. மாதம் 30 ஆயிரம் சம்பளம் வாங்கும் பெண் ஊழியரிடம் ரூ.7 கோடிக்கு சொத்து !