India

120 அடி ஆழ் கிணற்றில் தவறி விழுந்த முதியவர்.. 3 நாட்களுக்கு பின் சென்ற பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி!

கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கம் எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் பாவாடை (70). இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் புதுச்சேரி மடுகரை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கோவில் திருவிழாவில பங்கேற்பதற்காக வந்திருந்தார்.

இந்நிலையில் அவர் இயற்கை உபாதை கழிக்க மறைவாக வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கிணற்றின் அருகில் சென்றபோது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்துள்ளார். தொடர்ந்து அவர் காப்பாற்றுமாறு கூச்சலிட்ட நிலையிலும் கிணறு 120 அடி ஆழம் கொண்டது என்பதால் அது யாருக்கும் கேட்கவில்லை.

இது தவிர அங்கு திருவிழா நடந்துகொண்டிருந்துள்ளதால் பாவாடை காணாமல் போனதை அவரது உறவினர்களும் கண்டுகொள்ளவில்லை. உறவினர் வீட்டில் இருப்பார் என பலர் நினைத்துள்ளனர். இதனிடையே சுமார் மூன்று நாட்களாக பாவாடை கிணற்றின் உள்ளேயே இருந்துள்ளார்.

பின்னர் அந்த வழியாக சென்றவர் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது அங்கு மயங்கிய நிலையில், ஒருவர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அதன்படி டுகரை தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் போராடி கிணற்றில் தவித்த முதியவரை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அவரின் நெற்றியில் லேசான காயம் மட்டும் ஏற்பட்டிருந்ததால், அவரை மடுகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தீயணைப்பு வீரர்கள் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “அந்த மீசைக்கார Uncle தான்..” - 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்.. கம்பி எண்ணும் பள்ளி பியூன் !