India

5 மாதங்களே தெரிந்த நண்பர்.. நம்பி காரில் ஏறிச்சென்ற இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் !

மேற்கு திரிபுராவில் தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் பயின்று வருகிறார். இந்த சூழலில் சம்பவத்தன்று இவர் வெளியில் ஒரு வேலையாக சென்று விட்டு, தனியாக வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது இவருக்கு தெரிந்த கெளதம் ஷர்மா என்ற ஆண் நண்பர் ஒருவர் அந்த பகுதி வழியே காரில் வந்துள்ளார். அவருடன் அவரது காரில் 2 நண்பர்களும் இருந்துள்ளனர். உடனே இந்த பெண்ணை பார்த்ததும் காரை நிறுத்திய அந்த இளைஞர், அவரிடம் லிப்ட் வேண்டுமா என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த இளம்பெண்ணோ, வேண்டாம் என்று கூறியுள்ளார். இருப்பினும் அந்த இளைஞர் வற்புறுத்தவே இரவு நேரம் என்பதால் வேறு வழியின்றி காரில் ஏறியுள்ளர். அப்போது அந்த இளைஞர்கள் அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியுள்ளனர். பின்னர் அனைவரும் சேர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பயந்துபோன அந்த பெண், உடனடியாக காரை நிறுத்தும்படி கூறியுள்ளார்.

இருப்பினும் விடாமல் காரை ஓட்டிச்சென்றுள்ளார் இளைஞர். தொடர்ந்து அந்த பெண்ணை ஓடும் காரில் வைத்தே மூன்று பேரும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அந்த இளம்பெண்ணை அமடாலி பைபாஸ் நெடுஞ்சாலையில் விட்டுவிட்டு சென்றுள்ளனர். அந்த பெண் காலை வரை அதே இடத்தில் மயக்க நிலையில், கோரமாக கிடந்துள்ளார்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கே அவரை பரிசோதனை செய்தபோது, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில், தனக்கு நடந்தவற்றை கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இந்த வழக்கில் தொடர்புடைய கெளதம் ஷர்மா (26), மற்றும் அவரது நண்பர்கள் சுதீப் சேத்ரி (31), பிரசென்ஜித் பால் (26) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களில் ஒருவரது வீட்டில் இருந்து ஐபிஎல் பெட்டிங் மற்றும் பணமோசடி தொடர்பாக சில ஆவணங்கள் மற்றும் மடிக்கணினி மற்றும் ஏடிஎம் கார்டுகளும் போலீசார் கைப்பற்றினர்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கெளதம் ஷர்மாவை சுமார் 5 மாத காலமாக தெரியும் என்றும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: போதையில் ஒற்றை காட்டு யானையிடம் வம்பிழுத்த மீசை முருகேசன்.. தட்டி தூக்கிய வனத்துறை அதிகரிகள் !