India

தண்டவாளத்தில் நண்பர்களுடன் சேர்ந்து Reels.. வேகமாக வந்த இரயில் மோதி 9-ம் வகுப்பு மாணவன் உடல் சிதறி பலி !

நவீன உலகில் அனைவரும் பயன்படுத்தும் முக்கிய உபகரணங்களில் முக்கியமானவையாக மொபைல் போன்கள் உள்ளது. அதில் முக்கியமான ஆப்கள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. எப்போது இந்த மொபைல் போன்களில் செல்பி என்ற ஒன்று வந்ததோ, அப்போதில் இருந்து உயிரிழப்புகள் குறித்த செய்திகளும் வந்த வண்ணமாக காணப்படுகிறது.

அதோடு டிக் டாக் என்ற ஆப் மூலம் தங்கள் திறமைகளை உலகிற்கு காட்டலாம் என்று அநேகமானோர் பல விஷயங்களை செய்து வந்தனர். டிக் டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டதும், இன்ஸ்டாவில் ரீல்ஸ் என்ற ஒன்று வந்தது. தொடர்ந்து மக்கள் தற்போது அதனை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரீல்ஸ் மூலம் மக்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதுவே சில நேரங்களில் அவர்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கிறது. இவ்வாறு ரீல்ஸ் செய்யும்போது சில விபரீதங்கள் ஏற்பட்டு சில பேருக்கு உடல் உறுப்புகள் சேதமடைந்ததோடு, சில பேர்களுக்கு உயிரே பறிபோகும் நிலை உண்டாக்குகிறது. தற்போது இதுபோன்ற செயல்களுக்கு அனைவரும் அடிமையாகி விட்டனர் என்றே சொல்லலாம்.

சாகசம் செய்கிறேன் என்ற பெயரில் சிலர் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல், உயரமான இடங்களில் நின்று செல்பி எடுப்பது, ஆபத்தான இடங்களில் இருந்து ரீல்ஸ் செய்வது போன்ற செயல்களை செய்கின்றனர். இதே போல் சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில் ஒன்று வேகமாக வந்துகொண்டிருக்கும்போது தண்டவாளம் அருகே நின்று இளைஞர் செல்பி எடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது வந்த இரயில் அவர் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் இதே போல் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்தவர் முகமது சர்ப்ராஸ். 16 வயது சிறுவனான இவர், அந்த பகுதியில் உள்ள மதராசாவில் படித்து வருகிறார். இந்த சிறுவன், இன்ஸ்டா ரீல்ஸ் செய்வதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். எனவே அந்த சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி இதுபோல் ரீல்ஸ் செய்து, அதனை பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை மசூதியில் தொழுகைக்காக சென்ற அவர், அங்கே முடித்து விட்டு, அருகே இருக்கும் தண்டவாளத்தில் ரீல்ஸ் செய்ய எண்ணியுள்ளார். அதன்படி முசம்மில் மற்றும் சோஹைல் ஆகிய நண்பர்களுடன் அங்கு சென்றுள்ளார். அனைவரும் சேர்ந்து ரீல்ஸ் செய்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இரயில் சார்னு வேகமாக வந்துள்ளது.

அந்த சமயத்தில் தண்டவாளத்துக்கு மிக அருகில் நின்று ரீல்ஸ் செய்துகொண்டிருந்த சிறுவன் முகமது சர்ப்ராஸ் மீது அந்த இரயில் மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். இது தொடர்பான வீடியோ அங்கிருந்த சிறுவன் ஒருவரது மொபைலில் பதிவாகியிருந்தது. இதனை கண்டதும் பதறிப்போன நண்பர்கள், உடனடியாக முகமது வீட்டுக்கு சென்று தகவல் கொடுத்தனர்.

பின்னர் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் உயிரிழந்த முகமதுவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டு தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

Also Read: 62 வயது பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றிய 32 வயது உ.பி இளைஞர்.. பாலியல் வன்கொடுமை செய்ததாக பரபரப்பு புகார் !