India

“பில்கிஸ் பானு வழக்கில் நீதிமன்றத்தை கேலிக் கூத்தாக்கக்கூடாது.. இது நியாயமல்ல” : உச்ச நீதிமன்றம் கண்டனம்!

குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற மிகப்பெரிய மதக் கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற பெண்மணியின் மொத்த குடும்பமும் அகமதாபாத் அருகே உள்ள ரந்திக்பூர் என்ற கிராமத்தில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது பில்கிஸ் பானு, 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவரை, மதவெறியர்கள் ஈவு இரக்கமின்றி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும், இந்த கலவரத்தின்போது கொல்லப்பட்டனர். மேலும் பில்கிஸ் பானு படுகாயங்களுடன் உயிர்தப்பினார். பின்னர் இதுதொடர்பான வழக்கில் 11 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி வழங்கிய தீர்ப்பில், பலாத்காரம் மற்றும் கொலை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

குறிப்பாக அப்போது கருவுற்ற பெண்ணை கூட்டுப்பாலியல் செய்தது, 3 வயது குழந்தையை கொலை செய்தது உள்ளிட்ட வழக்கிகளில் 34 ஆண்டுகள் தண்டணை விதிக்கப்பட்டது. தண்டணை பெற்ற குற்றவாளிகள் 10 முதல் 15 ஆண்டுகள் மட்டும் சிறை தண்டணை அனுபவித்த நிலையில், குற்றவாளிகளான 11 பேரையும், குஜராத் பா.ஜ.க அரசு அண்மையில் விடுதலை செய்ததது. பா.ஜ.க அரசின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

சமீபத்தில் கூட குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், குஜராத் அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் பில்கிஸ் பானு வழக்கில் கைதான 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து, 11 குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, வழக்கு நீதிபதிகள் கே.எம்.ஜோசப், நாகரத்னா அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும் 11குற்றவாளிகளை முன் கூட்டியே விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்த கோப்புக்களை அடுத்த விசாரணையின் போது குஜராத் அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஒன்றிய அரசுக்கும், 11 குற்றவாளிகளுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்பின்னர் இந்த வழக்கு மீண்டும் மே 3ம் தேதிக்கு விசாரணைக்கு வந்த போது, விடுதலையான 11 பேரின் தரப்பு வழக்கறிஞர்கள் ஆவணங்களைத் தாக்கல் செய்ய மீண்டும் கால அவகாசம் கோரினர். இதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள் விசாரணையே நடைபெறக் கூடாது என நினைக்கிறீர்களா? வருகிற மே 19-க்குப் பின் கோடை விடுமுறை தொடங்குகிறது; ஜூன் 16-ந் தேதி நான் ஓய்வு பெறுகிறேன்.

இப்படி அவகாசம் கேட்டு இவ்வழக்கை நான் விசாரிப்பதையே தடுக்க நினைக்கிறீர்களா? எனவும் நீதிபதி ஜோசப் கேள்வி எழுப்பினார். மேலும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேண்டுமென்றே குற்றவாளிகள் வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதாக குற்றம் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, குற்றவாளி ஒருவருக்கு நேரடியாக நோட்டீஸ் வழங்க முடியாததால் அவருடைய வீட்டில் ஒட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது, அந்த குற்றவாளி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குஜராத்தில் உள்ள அவரைத் தன்னால் தொடர்பு கொள்ளமுடியவில்லை, அவரிடமிருந்து தகவல் இல்லை என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “நீதிமன்றத்தை கேலிக் கூத்தாக்கக்கூடாது. இதனால் மொத்த வழக்கு விசாரணையும் பாதிக்கப்பட்டுள்ளது. இது நியாயமல்ல” என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தபட்ட குற்றவாளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள விபரம் குறித்து மூன்று நாட்களில் குஜராத் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட உத்தரவிட்டனர்.

பின்னர் வழக்குப் விசாரணையை ஜூலை 11 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஜூன் 16 ஆம் தேதியோடு நீதிபதி கே.எம்.ஜோசப் ஒய்வு பெறுவதால் வழக்கின் அடுத்த விசாரணை வேறு நீதி அமர்வில் நடைபெற உள்ளது.

Also Read: "நான் இதை விசாரிக்க கூடாது என இப்படி செய்கிறீர்களா?" -பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆவேசம்!