India

ஆபாச சேட்டை.. மணமகன் செய்கையால் திருமணத்தை நிறுத்திய மணமகள்.. களேபரமான திருமண மண்டபம் !

உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் பகுதியை அடுத்துள்ளது மாணிக்பூர் என்ற பகுதி. இங்கு இளைஞர் ஒருவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் வரண் தேடியுள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் குடும்பம் பிடித்து போகவே, அவர்களுடன் சம்பந்தம் பேசியுள்ளனர். பின்னர் திருமண ஏற்பாடுகளும் தடபுடலாக நடைபெற்று வந்தது.

அதன்படி நேற்றைய முன்தினம் இரவு திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்துள்ளது. அதற்காக உற்றார் உறவினர்கள் என அனைவரும் வருகை தந்து அமர்ந்திருந்தனர். அப்போது மணமக்கள் இருவரும் காரில் ஊர்வலம் வந்துள்ளனர். அந்த சமயத்தில் மணமகன், மணமகளிடம் ஆபாச ஜோக் அடித்து பேசியுள்ளார்.

மேலும் அவரது நடவடிக்கைகளும் முகம் சுழிக்கும் வண்ணமாக இருந்துள்ளது. பின்னர் இருவரும் மண்டபத்துக்கு வந்துள்ளனர். அப்போது மணமகள் மேடையில் அமர்ந்திருந்திருந்த நேரத்தில், மணமகனும் திருமண மேடைக்கு வந்துள்ளார். அவர் வரும்போதே சிறிது தள்ளாடி கொண்டே வந்துள்ளார்.

இதனால் திருமண மண்டபத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் மணமேடையில் அமர்ந்த மணமகனிடம், புரோகிதர் ஒவ்வொரு சடங்குகளையும் செய்ய கூறியுள்ளார். அப்போது குங்குமத்தை எடுத்து மணமகள் நெற்றியில் வைக்கும்படி கூறுகையில், மணமகனோ அதனை எடுத்து மணமகள் முகத்தில் பூசியுள்ளார். மேலும் மணமகளை தாக்கியுள்ளார்.

இதனை கண்ட உறவினர்கள், பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளானர். இதையடுத்து மணமகள் உடனடியாக மணமேடையில் இருந்த எழுந்து திருமணத்தை நிறுத்தியுள்ளார். பின்னரே மாப்பிள்ளை குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இருப்பினும் திருமணம் நின்ற ஆத்திரத்தில், மணமகன் வீட்டார், மணமகள் வீட்டாரை மண்டபத்தில் இருந்து வெளியேற விடவில்லை.

இதையடுத்து இதுகுறித்து போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் விசாரித்தனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகே, மணமகள் வீட்டாரை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

Also Read: விளையாடி கொண்டிருந்த 2 குழந்தைகள்.. கிணற்றில் தவறி விழுந்ததில் தத்தளித்து உயிரிழந்த சோகம் !