India

மீண்டும் சர்ச்சையில் வந்தே பாரத்.. பரோட்டாவில் நெளிந்த புழுக்கள்.. இரயில் உணவால் பயணிகள் அதிர்ச்சி !

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட டெல்லி - வாரணாசி இடையே இயங்கும் முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். அப்போதில் இருந்து இப்போது வரை இந்த இரயில் சர்ச்சைக்குரிய ஒன்றாக அமைந்துள்ளது.

இதுவரை இந்த இரயிலை மாடு முட்டி சேதமடைந்ததோடு, மாடுகள் இறந்த செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அண்மையில் இது போல் வந்தே பாரத் இரயில் ஒன்றில் இருந்த ஓட்டை வழியாக மழை நீர் உள்ளே புகுந்ததால் பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளான செய்தி வெளியாகி எரிச்சலை ஏற்படுத்தியது.

மேலும் இந்த இரயில்களில் உள்ள தானியங்கி கதவு திறக்காமல் சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக பயணிகள் இரயிலுக்குள் மாட்டிக்கொண்டு அவதிக்குள்ளானர். இந்த செய்தி வெளியாகி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. இப்படி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் இந்த இரயில் தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

கேரளாவில் இருந்து காசர்கோடு வரை கடந்த ஏப்ரல் 25ம் தேதியில் இருந்து வந்தே பாரத் இரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த இரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த இரயில் தொடங்கப்பட்ட சில நாட்களிலே இதனை மர்ம நபர்கள் கல்லால் அடித்து சேதப்படுத்தினர். இதனால் இந்த இரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று இந்த இரயிலின் இ-1 பெட்டியில் பயணம் செய்த பயணிகளுக்கு பரோட்டா வழங்கப்பட்டது. அதில் ஒரு பயணிக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு இருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பயணி பரோட்டா பார்சலை அப்படியே மூடி வைத்துவிட்டார். அவர் காசர்கோடு சென்றடைந்ததும், இது குறித்து இரயில் நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

அதே நேரத்தில் அவருடன் ரயிலில் பயணித்த சக பயணிகள் ரயிலில் வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு இருந்ததை மொபைலில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது கண்டனங்களை குவித்து வருகிறது.

சுத்தமான வசதியான முறையில் பயணம் செய்ய வேண்டுமென்று தான் அதிக கட்டணம் செலுத்தி வந்தே பாரத் இரயிலில் பயணிகள் பயணம் செய்கின்றனர். ஆனால் இதில் இப்படி ஒரு பிரச்னை இருப்பதால் பயணிகள் மிகவும் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்த இரயில் தொடங்கி 10 நாட்களே ஆகும் நிலையில், இப்படி ஒரு பிரச்னையை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “இதுக்கு ஒரு எண்டே இல்லையா..” மோடி தொடங்கி வைக்கும் வந்தே பாரத் ரயில்கள்.. மோதி விளையாடும் மாடுகள் !