India

காணாமல் போன கணவர்.. ஆற்றங்கரையில் தோண்டியெடுக்கப்பட்ட அழுகிய சடலம்.. மனைவி உட்பட 3 பேர் அதிரடி கைது !

புதுச்சேரி அரியாங்குப்பம் பூங்கொடிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் என்கிற அனில் (36). இவர் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு செல்வி என்கிற லுார்துமேரி (35) என்ற மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில் செல்வி ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 29-ம் தேதி காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற ஞானசேகரன், மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. தனது கணவனை காணவில்லை என்று மனைவி லுார்துமேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலிசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இதனிடையே ஞானசேகரினின் தந்தை சந்திரன் தனது மகனை அவரது மருமகள் லூர்த்துமேரிதான் ஏதேனும் செய்திருக்க கூடும், எனவே அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார். இதையடுத்து இந்த வழக்கை சிறப்பு அதிரடிப்படை போலிசாருக்கு மாற்றி கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து, உதவி ஆய்வாளர் சந்தோஷ் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில், ஞானசேகர் தனது வீட்டிலிருந்து கிளம்பி செல்லும்போது தனது செல்போன், ஆட்டோ, இருசக்கர வாகனம் ஆகிய எதையும் எடுத்து செல்லவில்லை என தெரியவந்தது. இதனால் அவரது மனைவி மீது சந்தேகமடைந்த போலிசார் அவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மனைவி லூர்துமேரிக்கு வேறு ஒருவருடன் காதல் இருந்துள்ளது தெரியவந்தது.

தொடர்ந்து விசாரிக்கையில், ஞானசேகரனும், செங்கல் - மணல் வியாபாரம் செய்யும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த செல்வம் என்பவரும் நண்பர்கள் ஆவர். இதனால் அடிக்கடி வீட்டுக்கு வரும் செல்வத்துக்கும், லூர்துமேரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாற, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

இப்படியே சில நாட்கள் போக, இந்த விவகாரம் கணவன் ஞானசேகரனுக்கு தெரியவந்து இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி லூர்துமேரி காதலன் செல்வம் உதவியோடு கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த 29 ஆம் தேதி ஆட்டோ ஓட்டி விட்டு வீட்டுக்கு வந்த ஞானசேகரனை, செல்வத்தின் நண்பரான பாலாஜி என்பவர், சுண்ணாம்பாறு சங்கரபரணி ஆற்றங்கரை அருகே சந்தன மரம் உள்ளதாகவும், அதனை வெட்ட ஆள் தேவை எனவும், அதை வெட்டி கொடுத்தால் அதிக பணம் கிடைக்கும் என கூறி ஞானசேகரனை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.

அங்கே சென்ற பின்னர், செல்வம் ஞானசேகரை கோழி செய்து, கழுத்தை அறுத்து, தோண்டி வைக்கப்பட்டிருந்த குழியில் புதைத்துள்ளார். பின்னர் கணவரை காணவில்லை என்று மனைவி நாடகமாடியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து செல்வம், அவரது நண்பர் பாலாஜி ஆகியோரை கைது செய்த போலிசார் இன்று காலை அவர்களை அழைத்துகொண்டு ஆற்றங்கரை ஓரமாக புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் கண்டு, ஞானசேகரன் உடலை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது தாசில்தார் முத்துகுமார் தலைமையில் அழுகிய நிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. தொடர்ந்து அதே இடத்தில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அழுகிய உடலை பலத்த போலிஸ் பாதுகாப்புடன் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

ஞானசேகரின் உடலை தோண்டி எடுக்கும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கைது செய்யப்பட்டு அந்த இடத்தில் இருந்த செல்வம் மற்றும் பாலாஜியை தாக்க முயன்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் போலிசார் அவர்கள் இருவரையும் பாதுகாப்பாக அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரியில் இரகசிய காதலை கண்டித்த கணவனை, காதலனை வைத்து கொலை செய்துள்ள மனைவி உட்பட 3 பேரை போலிசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "வேலைக்கு போ"- கண்டித்த சித்தப்பா.. ஆத்திரத்தில் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய அண்ணன் மகன் கைது !