India

குடும்பத்தை கொல்ல சதி? - அத்தை கொடுத்த Family Pack ஐஸ்கிரீம்.. சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த சோகம் !

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே அமைந்துள்ளது கோயிலாண்டி என்ற கிராமம். இங்கு முகமது அலி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு அகமது ஹசான் ரபி என்ற 12 வயது மகன் உள்ளார்.

இந்த சூழலில் கடந்த ஞாயிற்றுக் கிழமை சிறுவன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சில மணி துளிகளிலே மயக்கமடைந்துள்ளார். பதற்றமடைந்த பெற்றோர் உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் கடைசியாக எதை சாப்பிட்டான் என்று கேட்டபோது, ஐஸ்கிரீம் என்று பெற்றோர் கூறவே, உடனே அதனை சோதனை செய்தனர்.

அப்போது அதில் அம்மோனியம் பாஸ்பரஸ், என்ற எலி விஷம் கலந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனடர். அப்போது இந்த ஐஸ்கிரீமை கொடுத்தது சிறுவனின் சொந்த அத்தை என்று தெரியவந்தது.

அதாவது முகமது அலியின் சொந்த அக்காவான சாஹிரா என்பவர் சம்பவத்தன்று தனது தம்பி குடும்பத்துக்கு Family Pack ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அன்று சிறுவனின் சகோதரர்களும், தாயாரும் வீட்டில் இல்லை என்பதால், சிறுவனே அதனை தனியாக சாப்பிட எண்ணி சாப்பிட்டுள்ளார். அப்போதுதான் சிறுவனுக்கு மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து விசாரிக்கையில் முகமது அலிக்கும், அவரது அக்கா சாஹிராவுக்கும் ஏற்கனவே முன்பகை இருந்ததாகவும், இந்த சூழலில்தான் தம்பியின் குடும்பத்தை கொல்ல அவரே சதி செய்து விஷம் கொடுத்து கொலை முற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அதோடு இதுகுறித்து விசாரிக்க சாஹிராவை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய அதிகாரிகள் இதுக்குறித்து சிறுவனின் அத்தை சாஹிராவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2020-ம் ஆண்டு சொத்துக்காக சொந்த தங்கையை தன் கையால் உருவாக்கிய ஐஸ்கிரீமில் விஷம் கலந்து கொடுத்து அண்ணனே கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: விளையாடும்போது விபரீதம்: 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த கூலி தொழிலாளர்களின் 2 வயது மகன்.. சோகத்தில் கிராமம்!