India

புதுச்சேரி : தேர்வு முடிந்த மகிழ்ச்சி.. நண்பர்களுடன் கடலில் குளித்து கொண்டாடிய மாணவன்.. இறுதியில் சோகம் !

புதுச்சேரி, உப்பளம் அவ்வை நகரைச் சேர்ந்தவர் மணிமாறன். அந்த பகுதியில் பெயிண்டராக இருக்கும் இவருக்கு ஒரு ஜீவகன் என்ற 14 வயது மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் ஜீவகன் புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த 10-ம் வகுப்பு பொது தேர்வு புதுச்சேரியில் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனால் தனது கடைசி தேர்வை எழுதிய ஜீவகன் மற்றும் அவரது நண்பர்கள், இனி விடுமுறையை கொண்டாடலாம் என்ற உற்சாகத்துடன் வெளியே செல்ல திட்டமிட்டனர். அதன்படி ஜீவகன் மற்றும் அவரது 5 நண்பர்களும் சேர்ந்து அங்கிருக்கும் பாண்டி மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

அங்கே குளிக்கவும் செய்தனர். அனைவரும் ஒருவர் மேல் ஒருவர் தண்ணீர் பாய்ச்சியும், தூக்கி போட்டும் விளையாடினர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் மாணவன் ஜீவகன் சிக்கினார். இதையடுத்து பதறி போன நண்பர்கள் அவரை காப்பாற்ற எண்ணினர். மேலும் கூச்சலிட்டனர். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த கடலோர காவல் படை காவல் துறையினர் உடனே கடலில் இறங்கி மாணவனை காப்பற்ற முயன்றனர்.

பின்னர் சிறிது நேர முயற்சிக்கு பிறகு மாணவன் ஜீவகன் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து அருகில் இருந்த காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் மாணவன் ஜீவகனின் சடலத்தை மீட்டு புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். தொடர்ந்து அவரது பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 10-ம் வகுப்பு தேர்வு முடிந்த சந்தோசத்தை கொண்டாட நண்பர்களுடன் கடலுக்கு சென்ற மாணவன், கடலில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: குரங்குகளால் உருண்டு போன பாறை.. சிறுவன் தலையில் விழுந்ததால் அதிர்ச்சி.. தெலங்கானாவில் நடந்தது என்ன ?